| இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடுதந் தன்ன வளம்பெரிது பெறினும் வராலென் யானே (அகம். 199) 1. தலைவன் பிரிந்து சென்றிருக்கும் நாடு வேற்றுமொழி வழங்குவது; கட்டி என்பவனது நாட்டிற்கு அப்பாலது. 2. களங்காய்க் கண்ணி நார்முடி என்னும் சேரன் பெருந்துறைப் போர்க்களத்து நன்னனை வென்றான்; இழந்த நாட்டை மீட்டான்? அச்சேர நாடுபோல வளம்மிகக் கிடைத்தாலும், அதற்காகத் தலைவியைப் பிரியேன் என்று நெஞ்சிற்குக் கூறுகின்றான் ஒரு தலைவன். வடுகர், கட்டி, நன்னன், நார் முடிச் சேரர் என்றினைய பெயர்கள் அகப்பாடல்களில் வருவது பார்த்து, அகத்திணைக்கண் பெயர் வரலாம் என்று மயங்கற்க. இவைகள் உரிப்பொருளுக்கு உரிய அகமாந்தர்களின் பெயர்கள் அல்ல. புணர்தல் பிரிதல் முதலான திணையொழுக்கங்கட்கும் இப்பெயரினர்க்கும் எத்தொடர்பும் இல்லை. “அகத்திணைக்கண் சார்த்து வகையான் வந்தனவன்றித் தலைமை வகையாக வந்தில” என்பர் நச்சினார்க்கினியர். முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொல். 948) என்ற அகச்செய்யுள் அமைப்பில் முதல் கரு என்னும் இரு பகுதிகளில் பெயர்ச் சுட்டுக்கள் வரலாம், வரும். இவையன்று அகம். உரிப்பொருளே அகமாம். முதலும் கருவும் அகமாகி உரிப்பொருளின் சூழ்நிலைகள், இச்சூழ்நிலைப் பகுதிகளில் எவ்வளவு வரலாறும் வரும் என்பதற்குப் பரணர் மாமூலனார் அகப்பாட்டுக்கள் சான்றாகும். மெய்யான அகப்பகுதிக்கண் ஊடிப் புணர்ந்து பிரிந்து இருந்து இரங்கும் தலைமக்களுக்குப் பெயர் யாண்டும் வராது என்பதுவே முடிபு. பிற தமிழ் இலக்கியங்களும் காதலும் சங்க அகவிலக்கியம் பிள்ளைத் தமிழலக்கியங்களையெல்லாம் ஒரு திறம்பட உருவாக்கியுள்ளது. இளங்கோ சாத்தனார் திருத்தக்கதேவர் சேக்கிழார் கம்பர் முதலான காப்பியப் புலவோர்க்கெல்லாம் காதல்பாடும் முறைக்கு வழி காட்டியவர்கள் அகப்புலவர்கள். தமிழ் மொழிக்கண் யார் பாடிய, எக்காலத்தைய, எவ்வகைப் பாட்டாயினும், தெய்வப் பாசுரமாயினும், நாடகபாணியாயினும், நாடோடிப் பாடலாயினும், திரைப்பாட்டாயினும், காதல் பாடுங்காலை அகத்திணைச் சுவடு பதிந்திருக்கும். தமிழ்ச் சமுதாயம் அகத்திணைக் கல்வி ஊறப்பெற்றது. அவ்வூற்றம் |