பக்கம் எண் :

260தமிழ்க்காதல்

கணக்குப் போடுதல் உண்டு. சாத்தன், கொற்றன், பூதன் என்ற பெயர்களுக்கு
மக்கள் மதிப்பில்லை. எவையாயினும் சில பெயர்கள் ஆண்டுச் சொல்முறைக்கு
வரவேண்டும். அவ்வளவே. பெயர் சுட்டும் இலக்கியங்கள் இக்கணக்கு முறை

போல்பவை. இவ்வகையிலக்கியங்கள் தாம் எல்லா மொழியிலும் உலகத்து
உள்ளன. தமிழ்மொழிக் கண்ணும் இவையுள. அ என்பவன் இ என்பவன்
கடைக்குச் சென்று பழங்கள் வாங்கி உ என்பவனுக்கு விற்றான் என்ற குறிக்
கணக்கியலும் ஒன்று உண்டுகாண். அகத்திணை இதுபோலும் நுண்ணிலக்கியம்.
இவ்விலக்கியம் தமிழர் கண்டது, தமிழிற்றான் உள்ளது. தலைவன் தலைவியைக்
காதலித்தான்; அதற்குத் தோழி தூதுசெய்தாள்; தலைவி தலைவனொடு உடன்
போயினாள்; செவிலி சுரத்திடைத் தேடிச் சென்று முக்கோற் பகவர்களைக்
கண்டாள்; தலைவன் தலைவியை மணந்தான்; பரத்தைவயிற் பிரிந்தான்
என்றவாறு கூற்றுப் பெயரால் கூறுவது அகத்திணை வழக்கு.
அகப்பாடல்களுக்கு எழுதியிருக்கின்ற துறைகளையெல்லாம் காண்க. யாண்டும்
ஆண் பெண் இயற்பெயர்கள் வாரா; தலைவன் தலைவி என்றின்ன பங்குப்
பெயர்களே வரும். உலகொட்டும் நுண்ணிலக்கியம் கன்னித் தமிழில்
இருப்பதை ஞாலம் அறியாது. அறிவியாக் குறை நம்பாலது. அரித்தாட்டிலும்
சித்தினியும் அறிந்திருப்பரேல் பெயரில் தூய இலக்கியம் பாட முடியும்.
தமிழிற்காண் என்று காரணம் காட்டியிருப்பர் மன். மொழித்துறையில்
நுண்ணிலக்கியம் காண்பது எளிதன்று. இன்றுவரை எம்மொழியாளரும்
கண்டதில்லை. தமிழினம் கண்டிருத்தலின், நுண்கணக்கியலும் தமிழில்
இருந்திருத்தல் வேண்டும் எனவும், அதன் பெருவளர்ச்சியே நுண்ணிலக்கியத்
தோற்றத்திற்கு உதவியிருக்கும் எனவும் ஊகிக்கலாம்.


முதல் கருப்பொருள்கள்

     அகத்திணைப் பாட்டாவாது பெயரற்றது. இது பிழையா பிழைப்படக்கூடா
அகமுறை. எனினும் ஈண்டு ஒரு விளக்கம். கண்ணுக்கு வந்த சில
அகச்செய்யுட்களைப் படித்தாலும், அரசர் பெயர்களும் பிறர் பெயர்களும்
அன்னவர் ஆற்றிய செயல்களும் வரலாற்றுக் குறிப்புக்களும் மண்டிக் கிடப்பக்
காணலம். புறநானூறு போலவே அகத்தொகைகளும் தமிழர் வரலாறு வரையப்
பெருந்துணை யாவதை அறிவோம்.     

     குல்லைக் கண்ணி வடுகர் முனையது
     பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
     மொழிபெயர் தேஎத்த ராயினும்
     வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே          (குறுந். 11)