| சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் உரனவித் தன்றே. (95) பாரிமகளிர் ஒரே புறப்பாட்டுப் பாடியோர். ஆரியவரசன் ஒரே அகப்பாட்டுப் பாடியவன். கபிலரோ புறமும் அகமும் பல கண்டவர். பாரிமகளிர்க்கும் ஆரியவரசனுக்கும் கற்பித்த ஆசான் கபிலர் என்று ஊகிக்க இடமுண்டு.1 மாணவர் பாடலும் ஆசிரியர் பாடலும் ஒத்த ஒரு பெருந்தரமாக இருக்கக் காண்கின்றோம். இஃதோர் எடுத்துக்காட்டு. இங்ஙனமே பிற ஆசிரியன்மாரிடம் கற்ற பின் மாணவரின் கல்வி வன்மையும் நற்றரமாக இருந்தது என்பதற்கு எல்லாச் சங்கப் பாடல்களும் சான்றாகின்றன. “பண்டைத் தமிழ்ச் சங்கம் இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டு நன்முறையானது. சங்கத்தார் செய்யுட்களைத் தணிக்கை செய்து பதர்களைந்து இலக்கிய மேன்மையைக் காத்தனர். ஒப்புதற்கு வந்த செய்யுட்களில் இழி சொல்லும் கொச்சை மொழியும் இருக்குமேல் ஏற்றுக்கொண்டிலர். இலக்கண இலக்கிய விதிகளைக் கண்டிப்பாக வலியுறுத்தின காரணத்தால், எண்ணியாங்குப் பாடும் உரிமையும் கருத்துப் புதுமையும் ஓரளவு நசுக்குண்ட போதினும், குற்றமற்ற நல்ல பாடல்கள் தோன்ற முடிந்தன” என்று பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளை தமிழ்ச் சங்கப்பணியைப் பற்றி விளக்குவர்; சங்கப் பாடல்கள் சொல்லாலும் பொருளாலும் புலப்பாட்டாலும் ஒரு தன்மையவாகத் தோன்றுவதற்கு ஏதுக் காட்டுவர்.2 இவர் விளக்கம் ஒருபால் உண்மையே. ஏறக்குறைய ஐந்நூறு பெருமக்களின் பாடல்களைச் சங்கப்பனுவல்கள் தாங்கி நிற்கின்றன. இத்துணைப் பேரும் ஒத்த நல்ல புலமையாற்றலோடு பாடியுள்ளனர். அங்ஙனம் பாடவேண்டுமேல், அன்று நாடு முழுதும் ஒரு தன்மையாகப் பரவியிருந்த கல்வி முறையே தலையாய காரணமாதல் வேண்டும். சங்கத்தார் தகா என்று தள்ளிய பாடல்கள் பல இருக்கலாம். தள்ளாது தழுவிய பாடல்களே இரண்டாயிரத்துக்கும் வியனாக மிகுந்திருப்பதை நோக்குங்கால், இப் பெருக்கத்திற்கு வரன் முறையான கல்வியாற்றலே காரணமாம் என்பது தெளிவு. சமுதாய நலம் நோக்குக; தூய பொருள்பற்றிப் பாடுக; மொழிப் புண் செய்யற்க; தூய சொல்லை ஆளுக என்ற எழுத்து நெறிகளை மாணவர் மனத்துப் பதித்தது அற்றைக் கல்வி; அதன் பயனேயாம் சொல்லாலும் பொருளாலும் தூய சங்க விலக்கியம். சங்கத்தின் அகப்புலவர் ஏறக்குறைய நானூற்றவர். இவர்தம் பெருமை பாட்டின் எண்ணிக்கையையோ அடிகளையோ பொறுத்ததன்று. யார் பாடிய எப்பாடலும் ஆராய்ச்சிக்கு உரிய ____________________________________________________ உ. வே. சா.: பத்துப்பாட்டு; பாடப்பட்டோர் வரலாறு. studies in Tamil literature and History, p. 55. Tamil literature, p. 18. |