பாடியோர் பாவின் வனப்பும் சங்கத் தன்மையுடையனவாகவே உள. நூல் நூறு எழுதியோர் திறஞ்சான்றோர் எனவும், தொல்காப்பியர் திருவள்ளுவர் இளங்கோபோல நூல் ஒன்றே எழுதினார் திறஞ்சாலார் எனவும் கூறுவதுண்டோ? எல்லாம் சிந்தனைத் திறத்தைப் பொறுத்தது. சங்க காலம் யார்க்கும் சிந்தனையை வளர்த்த காலம். சங்கக்கல்வி கற்பவர்க்கெல்லாம் சிந்தனையை ஊட்டிய கல்வி. 378 அகப்புலவோருள் ஒரே பாடல் பாடியமைந்த புலவோர் தொகை 249 எனின், படித்தோர் பெருக்கமும், பாடவல்லுநர் பெருக்கமும், சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்க காலத்து இருந்தமை பெறப்படும். பாரிமகளிர்-புறநானூறு அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம்; எங்குன்றும் பிறர்கொளார். இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தரெங் குன்றுங் கொண்டார்யாம் எந்தையும் இலமே. (112) கபிலர்-புறநானூறு பாரி பாரி யென்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர். பாரி யொருவனும் அல்லன்; மாரியும் உண்டீண்டு உலகுபுரப் பதுவே. (107) ஆரியவரசன் யாழ்ப்பிரம தத்தன் குறுந்தொகை அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே; இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்டு ஆண்டொழிந் தன்றே மாண்தகை நெஞ்சம்; மயிர்க்கண் அன்ன மாண்முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள் கண்வலைப் படூஉங் கான லானே. (184) கபிலர் -குறுந்தொகை மால்வரை இழிதரும் தூவெள் ளருவி கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் |