பக்கம் எண் :

280தமிழ்க்காதல்

உப்புச் சகடத்தை ஏற்றிழிவுடைய குன்றுகளில் மடுத்து இழுத்துச் செல்லும்
காளைபோல் வெய்து உயிர்க்கின்றான். இஃதோர் திணைக் கலப்பு மணம்.
நெய்தற் றலைவிக்கும் குறிஞ்சித் தலைவனுக்கும் காதற்றொடுப்பு நிகழ்கின்றது
(அகம். 140)     

   
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
    கொள்ளீ ரோவெனச் சேரிதொறு நுவலும்
    அவ்வாங் குந்தி யமைத்தோ ளாய்நின்
    மெய்வாழ் உப்பின் விலை எய்யாம்        (அகம். 360)

என்பதும் ஓர் கலப்புமணப் பாடல்; நெய்தல் மகளுக்கும் முல்லை மகனுக்கும்
நிகழும் காதலைப் புனைவது, நெல்லளவிற்கு உப்பளவு கிடைக்கும் என்று
கூறிச்செல்லும் உமணக் குமரியைப் பார்த்து, கடலுப்பின் விலையைக்
கூறினாய், அறிந்தேன். நின் மெய்யுப்பின் விலைதான் தெரியவில்லை என்று
குறும்பாகவும் காதற் குறிப்பாகவும் கேட்டான். ஈண்டும் அம்மூவனாரின்
மொழிப் புதுமையைக் காண்கின்றோம். சொல் விளையாட்டு சங்கமொழித்
தன்மையன்று. பிற்காலத் தமிழில் பெருகிய ஒரு மொழிநயம். உப்பு என்னும்
சொல்லுக்கு, சுவை இனிமை சத்து என்ற பொருள்களும் உண்டாதலின்,
மெய்வாழ் உப்பு என்று புணர்ச்சியின்பத்தைச் சுட்டினான் காதற் குறும்பன்.

அம்மூவனார் பாடலின் தலைவியர் உறுதியும் உணர்ந்த அடக்கமும் உடைய
பண்பினர். தீமைக்குப் பணியார். தம் பண்பு மாறார். ஒருத்தியின் பெற்றோர்
வேறொருவனுக்கு மணம்பேச இருந்தனர். அதுகேட்டுக் கலங்கிய
இளநங்கையாதும் பேசிற்றிலள், உணவு கொள்ள மறுத்தாள். பட்டினி கிடந்து
தன் மறுப்பைக் காட்டத் துணிந்தாள்; மாளவும் துணிந்தாள்போலும்.
(ஐங். 168).

    இம்மை மாறி மறுமை யாயினும்
    நீயா கியரெங் கணவனை
    யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே     (குறுந். 49)

இது ஒரு தலைவியின் உறுதிப்பாடு. தலைவன் பெரும்பரத்தன்
இன்பத்துறையில் மிக எளியவன் என்பதற்காகத் தமிழ்ப் பெண் நெஞ்சுமாறாள்,
இல்லறம் துறவாள். இல்வாழ்க்கையை ஆடாது அசையாது நிலைகாக்கும்
தூண்போல்பவள் பெண் என்பது தமிழியம். “எப்பிறப்பிலும் என்கணவன்
நீயாவாய்; நின் ஒழுக்கம் எவ்வாறாயினும், நின்மனத்துக்கு பிடித்த மனைவியாக
நான் இருப்பேன்” என்பதன்றோ உறுதியெனப்படும். என் ஒழுக்கம் நின்
ஒழுக்கத்தைப் பொறுத்தது; நீ திரியின் எனக்கும் திரிபேற் படாதா? என்று
சொல்லுதல் ஊதிய முறையாகுமேயன்றி ஒழுக்கப் பெற்றியாகாது.
திரிந்தவனைத் தான் திரியாது திருத்துதல் சால்பாகும்; திரிந்தவனால் தானும்
திரிவுபடுதல் கயமையாம்.