| பண்டைத் தமிழ்ப் பெண்டிர் தாம் என்றும் நிலைதிரியாத் திண்ணியர், அத் திண்ணிய அன்பினால் கணவனைத் திருத்த முயலும் நெறியினர். இஃது தமிழர் கண்ட இல்லற நாகரிகம். “இம்மை மாறி மறுமை யாயினும்” என்ற உறுதித் தொடரைக் கேட்கும். ஆடவனது மனம் சிறிது சிந்திக்கும் “நீ யாகியர் எங்கணவனை” என்ற அன்புத் தொடரைக் கேட்கும்போது திருந்தும் எண்ணம் பிறக்கும். “யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே” என்ற பண்புத் தொடரைக் கேட்கும்போது, இப்பிறவியிலேயே அவளின் நெஞ்சு நேர்பவனாக ஆகவேண்டும் என்ற கருத்துத்தோன்றி, ஆகினேன் என்று சொல்ல மாட்டானா மனம் மிக்க ஆண்தகை? அறிவும் மயங்கிப் பிறிதா கின்றே நோயும் பேரும் மாலையும் வந்தன்று யாங்கா குவென்கொல் யானே; ஈங்கோ சாதல் அஞ்சேன்? அஞ்சுவல் சாவிற் பிறப்புப்பிறி தாகுவ தாயின் மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே. (நற். 397) இஃதோர் தலைவியின் உறுதிநிலை. பிரிந்த தலைவன் நெடுநாளாகியும் வரவில்லை. வருவான் வருவான் என்று வழி நோக்கிக் கண்ணும் பூத்தது. பணைத்தோளும் சுருங்கிற்று. அறிவும் பிறிதாயிற்று. ஆளை முடித்துத்தான் நோய்தீரும் போலும். இந்நிலைப் பாழ்பட்ட தலைவி துயருக்கு அஞ்சவில்லை. துயர்தரும் இறப்புக்கு அஞ்சவில்லை. இறந்தபின் பிறப்புக்கும் அஞ்சவில்லை. இறக்கவும் விரும்புகின்றாள், பிறக்கவும் விரும்புகின்றாள். பின் எதற்கு அஞ்சுகின்றாள்? எதனை விரும்பவில்லை? இக்காதலனுக்கு மீண்டும் மனைவியாகாத பிறப்பு வந்துவிடுமோ என்று அஞ்சுவள். நெட்டிடைப் பிரிவால் இறப்பித்த காதலனாயினும் அவனை மறப்பிக்கும் மறுபிறப்பு வரக்கூடாதே என்று கவல்வள், மாறிப் பிறப்பினும் அவன் கணவன், யான் துணைவி என்ற உறவுமுறை மாறலாகாது என்று விரும்புவள். பெண்ணுள்ளத்தைத் தமிழ்ச் சமுதாயம் வளர்த்த மாண்பு இது. 3. அள்ளூர் நன்முல்லையார் சங்கத்தின் சிறந்த புலமையாட்டிகளுள் ஒருவர் நன்முல்லையார். “பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன” (அகம். 46) என்று தன் ஊரை உவமப்படுத்திய அன்பினர். இவர் தம் அகப்பா பத்தினுள் இரண்டு களவின் மேலும் எட்டு கற்பின் மேலும் இயல்வன. மருதம் அல்லது பரத்தையிற்பிரிவு என்பது இவர் துறைபோய பொருள். இவரைக் கவர்ந்த அகவிலக்கியத்தின் ஆள் தலைவி. ஏழு பாடல்கள் தலைமகள் கூற்றின. |