2. அகத்திணைப் பாகுபாடு அகப்பொருள் புறப்பொருள் என்னும் தமிழ் நூல்வகை இரண்டனுள் சிறந்த அகத்திணையாய்வு இனிப் பன்முறையான் மேற்கொள்ளப்படும். ஆய்வுக்கிடை எத்தனையோ கருத்து மாறாட்டங்கள் வல்லவன் இட்ட முடிச்சுப்போலத் தோன்றி நம்மை மலைவிக்கின்றன; குழந்தைக்குப் போடும் புதிர்கள் போல நம்மறிவைச் சோதிக்கின்றன. கயிறு செய்வோன் முடிச்சோடு செய்வதில்லை. அதனைப் பயன் கொள்வார் தம் அறியாமையாலும் துணிச்சலாலும் முடிச்சுக்கள் பட்டுவிடுகின்றன. “புதிர்கள் போடுவார்க்கேனும் விளங்கவேண்டுமல்லவா?” சிலர்க்குப் புதிர்கள் இடத் தெரியுமேயன்றி அவற்றை விடத்தெரியா. இங்ஙனமாக அகத்திணைக்குக் காலந்தோறும் ஏறிய முடிச்சுக்களும் பலவாயின. இப்படி முடிச்சுக்களை- கடும் புதிர்களைக் கண்டு மலையாதும், இடையில் தோன்றிய முடிச்சு எடுத்துப் புதிர்விடுத்துப் போவதுதான் ஆய்முறை என்று மயங்காதும், ஆய்வாளன் அகத்திணை மூல இலக்கியத்தோடு நேரடி அறிவுத் தொடர்பு கொள்ளும் அடியவன் போலச் செம்பொருள் காண்பான். மரபியல், நூலியல், அறிவியல் உளவியல் பற்றிச் சொல்லுங்காலைத் தம் முயற்சிக்கு ஏற்ப அகத்திணை ஐயங்கள் அகன்றொழியக் காண்பான். தொல்பழம் படைப்பான அகவிலக்கியத்தின் உள்ளங்காண முயலும் நமக்கு, |