பக்கம் எண் :

அகத்திணைப் புலவர்கள்349

காண்கின்றேன்” என்று இனிது வேண்டினான். தலைவன் முன்னே செல்வதும்,
தலைவி பின்னே செல்லுவதும்தான் இன்றுங் காணப்படும் தமிழ்ச் சமுதாய
வழக்கு என அறிவீர்கள். ஆதலின், அத்தலைவி வழக்கத்திற்கு மாறாக
முன்னே செல்ல நாணினாள்; தலைகுனிந்தாள். அதுகண்டு தலைவனும்
முன்னே செல்லாது நின்று கொண்டான். யார் முன் செல்வது என்ற பூசலில்
இருவரும் நடவாது உட்கார்ந்து விட்டார்கள். இவ்வகை அன்புக் காட்சியைக்
காட்டுவார் பெருங்கடுங்கோ.     கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை

    
அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்
    செல்சுடர் நெடுங்கொடி போலப்
    பல்பூங் கோங்கம் அணிந்த காடே      (நற். 202)


உடன்போக்கின் தொடக்கத்துத் தலைவன் காதலிக்குச் சுட்டும் காட்சி அது.
“நாம் இப்போது சென்று கொண்டிருக்கும் காடு உன் தந்தையது. கார்த்திகை
விளக்கு வரிசை போல மலர்ந்திருக்கும் கோங்கம் பூக்களைப் பார், பார்”
என்று நயவுரை மொழிகின்றான் காதலன். தந்தையின் காடு என்று
குறிப்பிடுவதன் நோக்கம், அவளுக்குக் குடும்பத்தின் பிரிவுச் சோர்வு
தோன்றாமைப் பொருட்டு.

     சங்கப்பனுவலில் உடன் போக்குத் துறைக்கண் அரிய புதிய ஒரு
செய்தியைப் பாடியவர்கள் மருதன் இளநாகனாரும், ஓதலாந்தையாரும்,
பெருங்கடுங்கோவும் ஆவர். இம்மூவரும் பாடிய பாடற்பகுதிகள் பின்வருவன:

              
மருதன் இளநாகனார்-நற். 262     

   
வினையமை பாவையின் இயலி நுந்தை
    மனைவரை யிறந்து வந்தனை ஆயின்...
    நீவிளை யாடுக சிறிதே யானே
    மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
    மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
    அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
    நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

                
ஓதலாந்தையார் - ஐங். 313

    
அறஞ்சா லியரோ அறஞ்சா லியரோ
    வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
    வாள்வனப்பு உற்ற அருவிக்
    கோள்வல் என்னையை மறைத்த குன்றே.

                
 பெருங்கடுங்கோ - நற். 48

    
புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக்
    கிடினென இடிக்கும் கோற்றொடி மறவர்