பக்கம் எண் :

350தமிழ்க்காதல்

    வடி நவில் அம்பின் வினையார் அஞ்சாது
    அமரிடை உறுதர நீக்கிநீர்
    எமரிடை உறுதர ஒளித்த காடே.


உடன்போகும் வழியில் தலைவியை நோக்கி, “அச்சம் சிறிதும் இன்றி நீ
விளையாடுக. பாலை மறவர்கள் வந்து போர் தொடுத்தால், அஞ்சாது
அவர்களைப் புறங்காண்பேன். நும் சுற்றத்தார்கள் வந்தால், முன்னிற்காது
மறைந்து கொள்வேன்” என்று இரு கருத்துக்களைத் தலைவன் கூறுவதாக
இளநாகனார் பாடியுள்ளார். சுற்றத்தார் பின் தொடர்ந்து வந்தனர் எனவும்,
அப்போது தலைவன் அங்கிருந்து மலைக்குள் மறைந்து கொண்டனன் எனவும்
நடந்த நிகழ்ச்சி ஒன்றை ஓதலாந்தையார் பாடுவர். உடன் போக்கிடை
முதற்கண் தலைவனுக்கும் மறவருக்கும் போர் உண்டாயிற்று. அமரை
வென்றான் எனவும், அதன்பின்னர், தலைவியின் சுற்றத்தார் தொடர்ந்து
வருவதைக் கண்டான் காட்டிற்குள் ஒளிந்துக் கொண்டான் எனவும் ஆக
இளநாகனார் கூறிய இரு கருத்துக்களும் நிகழ்ந்தன என்று
பெருங்கடுங்கோவின் பாட்டிற் காண்கின்றோம். தலைவன் வீரன் என்றும்,
வீரமும் காதலும் உறழ்ந்தபோது காதலுக்காக வீரத்தை மறைத்துக் கொள்பவன்
என்றும் அறிகின்றோம். இடைச்சுர மருங்கில் அவள் தமர் எய்துவார்கள்
(986) என்று தொல்காப்பியர் மொழிந்த குறிப்பின் விரிவாக மேலைப்
பாடல்கள் அமைந்துள.

இளமையும் வளமையும்

     வீரத்தினும் காதல் சிறந்தது போலப் பொருளினும் காதல் பெரியது
என்று காட்டுவர் பெருங்கடுங்கோ. இப்புலவரின் பெரும்படைப்பான
பாலைக்கலியில் பொருளுக்கும் இளமைக்கும் உரிய போராட்டத்தைக் கணவன்
மனைவிக்கிடையே வைத்துப் பலவாறு தொடுப்பர். தலைவன் பொருள்
குவிக்கும் விழைஞன். பொருள் நோக்கம் அவன் வாழ்க்கை நோக்கமன்று.
கடமைகளைத் திறம்பட ஆற்றுவதற்கே பொருட்கருவியை நாடுகின்றான்.
முன்னோர் வைத்த தாயப்பொருளைக் கொண்டு இல்லறம் செய்வதைச்
சிறுமையாகக் கருதுகின்றாள். “உள்ளது சிதைப்போர் உளரெனப் படா அர்”
(குறுந். 283) “உள்ளாங்கு உவத்தல் செல்லார்” (அகம். 111) “வினையே
ஆடவர்க்கு உயிரே” (குறுந். 135) என்பன அவனது பெருமித எண்ணங்கள்.
ஆதலின் தலைவன் பொருள்வேட்கை குறை கூறும் தகைத்தன்று. பொருள்
இல்லாக் கணவனை இல்லாளும் வேண்டாள்; இன்பமும் குறையுமன்றோ?

    அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
    பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
    பொருளின் ஆகும் புனையிழை என்றுநம்
    இருளேர் ஐம்பால் நீவி யோரே