பக்கம் எண் :

38தமிழ்க்காதல்

1. ஐந்திணை-களவியல்-இயற்கைப் புணர்ச்சி

     அகத்திணையின் பெருங்கூறான ஐந்திணைக் காதல்களை இனி
ஆராய்வோம். சங்க அகப் பாடல்களைச் சான்றாகக் கொண்டு ஐந்திணைத்
துறைகளின் திறன் காண்போம். களவொழுக்கம் கற்பொழுக்கம் என ஐந்திணை
இருபாற்படும் என்று பொதுவாகக் கூறினாலும், குறிஞ்சிக்களவு குறிஞ்சிக் கற்பு,
பாலைக்களவு பாலைக்கற்பு, முல்லைக்களவு முல்லைக்கற்பு, மருதக்களவு
மருதக்கற்பு, நெய்தற்களவு நெய்தற்கற்பு எனத் திணைதோறும் இரண்டும்
கொள்ளத்தகும். இங்ஙனம் கொள்வதால் களவுக்காதலும் கற்புக்காதலும் எல்லா
நிலத்திலும் நிகழ்வனவே என்னும் உலக வழக்கம் பெறப்படும்.


காதலுக்குக் காரணம்


     காமப்பருவம் எய்திய நங்கை, தாய் ஏவற்படி தினைப்புனம்
செல்கின்றாள். தோழியரும் உடன்செல்கின்றனர். முற்றிய கதிர்களைக் கவரும்
கிளிக்கூட்டத்தைத் தட்டைக் கருவிகொண்டு வெருட்டுகின்றனர்.
அருவியாடியும் தழை கொய்தும் மலர் தொடுத்தும் வந்து
அசோகந்தண்ணிழலில் அமர்கின்றனர் (குறிஞ்சிப். 39, 102) குமரப்பருவம்
எய்திய நம்பி தன் வேட்டைநாயொடு மலையெலாம் சுற்றித் திரிகிறான். பல்
மணம் கமழும் தலைமாலை அணிந்து இவ்வேட்டுவக் குமரன் நங்கை
இருக்குமிடத்துக்குத் தானாக வந்து சேருகிறான் (அகம்.28). தன் அம்பால்
புண்பட்ட மதயானை இப்பக்கம் போந்ததுண்டோ? போக நீவிர்
கண்டதுண்டோ? என்று மலரூதும் வண்டின் இசைக்குச் செவி கொடுத்திருந்த
இளம் பெண்களை உசாவுகிறான் (அகம் 388.) அப்போது அவனுக்குக்
காதற்குறிப்பு இல்லை. மார்பில் செங்கழுநீரும் தலையில் வெட்சிப்பூவும்
அகத்துச்சந்தனப் பூச்சும் கையில் வில்லம்பும் கொண்டு முன்னிற்கும்
இளைஞனுக்கு முன்னே இளமாதர்கள் நிற்கக் கூசினர். வினாவுக்கு மறுமொழி
அன்னோர் நாவெழவில்லை. இதற்கூடே நம்பியின் கண்ணும் நங்கையின்
கண்ணும் நட்புக்கொண்டன. காதலாடின; காமத்தீப்பற்றின (அகம்.48)


     கண்டதும் காதல் என்பது இதுவே. “கண் தரவந்த காம ஒள்ளெரி”
(குறுந். 305) என்று குப்பைக் கோழியார் காமத்தின் பிறப்பிடமாகக் கண்ணை
கூறுவர். கல்லொடு கல் சேர்ந்து தீ உண்டாவதுபோலக் கண்ணொடு கண்ணும்
சேர்ந்து தீ உண்டாம்; அது காமத்தீயாம் என்று இப்புலவர் குறிப்பிப்பர். கல்
பிறப்பித்த தீ பஞ்சு முதலான பற்று பொருள் இல்லையாயின் வளராது. கண்
பிறப்பித்த காமத்தீ தானேயும் வளரவல்லது என்பதை ‘ஒள்ளெரி’ என்னும்
அடையால் அறியலாம். கண்கள் கலந்தபின் காதலர்தம் உள்ளங்கள்
கலக்கின்றனவா? முன்னரே உள்ளங் கலந்தமையைக் காட்டும் அறிகுறியா
கண்கலப்பு?