பக்கம் எண் :

அகத்திணைப் பாகுபாடு37

சிறப்பிலவாகலாம்; எனினும், அவ்விரண்டும் எழுதிணை எனப்பட்ட
அகத்திணை யாதற்கு இழுக்கில்லை.


    
கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
     முற்படக் கிளந்த எழுதிணை யென்ப      (தொல்.946)

என்ற தொன்னெறிப்படி, அகத்தின் முதலாகவும் இறுதியாகவும்
எண்ணுப்பெற்ற கைக்கிளை பெருந்திணைகளை ‘அகத்தைச் சார்ந்த புறம்’
என்று கோவையுரையாசிரியர் குறிப்பது அடி முரணில்லையா?
இவ்விரண்டையும் புறமாக்கிய அவர் ‘அகத்தை’ என்ற சொல்லால் முழுதும்
ஐந்திணையைத்தானே கருதிவிட்டார் என்பது புலப்பட வில்லையா?
கைக்கிளை பெருந்திணைகளின் பெருமைப்பாடு எவ்வாறாயினும், அவற்றை
அகத்திணைப் பகுப்பினின்று தள்ள முடியாமைக்கும், ஐந்திணையோடு
உடனெண்ணுதற்கும் குருதி யொப்பன்ன பண்பொப்பினை இவற்றிடைத் தமிழ்
மூதாளர் கண்டிருத்தல் வேண்டும். அவ்வொப்பினைப் பின்னியல்களில்
விரிப்பாம். இவ்விரண்டனையும் சேர்த்து கொள்ளாவிடின், அகத்திணை
நகமற்ற விரல்போலவும் படியற்ற மனைபோலவும் முழுவனப்பில் ஒரு
குறைவுடையதாகத் தோன்றும் என ஈண்டுக் குறிப்பிடல் போதும்.
ஏழுதிணைகளையும் ஒருங்கு சுட்டவேண்டுங்கால், அகத்திணை என்னும்
பொதுக் குறியீட்டை ஆளுதல் தொல்காப்பிய வழக்கு.


     புறத்தினை மருங்கிற் பொருந்தி னல்லது
     அகத்திணை மருங்கின் அளவுத லிலவே.   (தொல்.1000)

     அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர்

     புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின்   (தொல். 1001)


அகத்திணைப் பொதுப்பெயரை ஐந்திணைப் பிரிவின் மறுபெயராகத்
தொல்காப்பியம் ஆண்டதில்லை. “மக்கள் நுதலிய அகன் ஐந்திணை” (999)
“அன்பொடு புணர்ந்த ஐந்திணை (1037) என்றாங்கு உரிய பிரிவுப் பெயரால்
விதந்து சொல்லும் நடை நினையத்தகும். ‘அகன் ஐந்திணை’ என்ற
பொதுவடையால், ஐந்திணை அகத்திணையுள் ஒருவகை என்பதும்,
அகக்கைக்கிளை அகப்பெருந்திணை எனப் பிறவகைகளும் உள என்பதும்
கொள்ளக்கிடத்தல் காண்க. “அன்பின் அகத்திணை களவெனப்படுவது”
என்னாது, “அன்பின் “ஐந்திணை களவெனப்படுவது” என்ற இறையனாரும்,
“அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவி” என்று கம்பரும்
விழிப்போடு சொற் பெய்தலை ஒப்பு நோக்கவேண்டும். ஆதலின் கைக்கிளை
பெருந்திணைகள் குறைந்த பாடல்கள் உடையனவேயெனினும், அகத் திணை
ஆராய்ச்சியில் இடம்பெற வேண்டியவை என்பது தெளிவு.