பக்கம் எண் :

36தமிழ்க்காதல்

அகத்திணையும் ஐந்திணையும்

     அகத்திணைப் படைப்பில் கைக்கிளை பெருந்திணைகளைவிட ஐந்திணை
பல்லாற்றானும் மேலாயது என்பதற்கு உறழ்கூற்று வேண்டா. அகத்திணைத்
தொல்லாசிரியர் தொல்காப்பியர் கைக்கிளை பெருந்திணைகளின்
பொருள்களை இருவேறு தனிச்சிறு சூத்திரங்கள் அளவில் (995-996)
அகத்திணையியல் இறுதிக் கண்ணே சொல்லி அமைகுவர். ‘கைக்கிளை
முதலாப் பெருந்திணை இறுவாய்’ (949) என எண்ணுங்கால் முதலிடம் பெற்ற
கைக்கிளைகூடப் பொருள் கூறுங்கால் அவ்விடம் பெறாமை கருதத்தகும்.
‘கைக்கிளைக் குறிப்பே’, ‘பெருந்திணைக் குறிப்பே’ என்று இவ்விரு
திணைகளின் சிறுநிலை தோன்ற அவற்றின் பொருட் சூத்திரங்களை முடித்துக்
காட்டுவர். ‘குறிப்பு’ என்ற சொற்பெய்வால் இவ்விரு திணைகள்
விரித்துப்பாடும் பெற்றியவல்ல என்று சுட்டுவர். இதனால் தொல்காப்பியம்
ஐந்திணையே அகத்திணை
என்பதுபோல, ஐந்திணையின் இலக்கணக்
கூறுகளைப் பலபட விரித்துரைப்பக் காணலாம். அகத்திணையியல் 55
நூற்பாக்களைக் கொண்டது. அகத்திணை எனப் பொதுப் பெயர்
பூண்டிருந்தும், இதன் 50 நூற்பாக்கள் ஐந்திணையின் நெறிகளையே விரித்து
மொழிதல் காண்க. களவியல் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல்
எனப்படும் பிற நான்கு இயல்களுங்கூட ஐந்திணை நுவலும்
அமைப்பினவாகவோ உள. ஐந்திணைக் காதல் அறநலத்தது, உலகம்
ஒப்புவது, மக்கட்கு இயல்வது, இலக்கியத்துக்கு இசைந்தது. இன்ன
நன்னயங்களை நோக்கிச் சங்கப் புலமையினோர் ஐந்திணைத் துறைகளையே
பெரிதும் பாடினர். தொல்காப்பியர் செய்தது போலக் கைக்கிளை
பெருந்திணைகட்கு உரிய ஒதுக்கிடம் நல்கினர். இப்பாங்கின்படி, ஐந்திணை
பெரிதும், ஏனை இருதிணை சிறிதுமாக இந்நூலிலும் ஆராய்ச்சிப்படும்.


     ஐந்திணை இவ்வளவு மேலாந் தரத்ததெனினும், அகத்திணை ஐந்திணை
என்ற சொற்கள் ஒருபொருட் பன்மொழியாகா என்பது அறிக. இவற்றை
ஒன்றெனக் கருதியும், கைக்கிளை பெருந்திணைகளை அகத்தின் வேறெனக்
கருதியும் வளர்ந்த எழுத்தெல்லாம் பெரும் பிழை. ‘அகத்திணையின்கண்
கைக்கிளை வருதல் திணை மயக்காம் பிறவெனின், கைக்கிளை முதற்
பெருந்திணை யிறுவாய எழுதிணையினுள்ளும் கைக்கிளையும்
பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும்’ (பா.4) என்னும்
திருக்கோவை யுரையாசிரியர் கருத்துரை இப்பிழையிடங்களுள் ஒன்று.
ஒருகுடிப் பிறந்த பல்லோருள் சிலர் சிறப்புற்றும் மற்றும் சிலர்
சிறப்பின்றியும் இருத்தற்காக, அன்னோர் ஒரு
குடிப்பிறப்புக்கு இழுக்குண்டோ?
ஐந்திணை நோக்கக் கைக்கிளை பெருந்திணைகள்