| ஆய்வுக்கு உரிய அரிய சிக்கல் என்று நம் முன்னோரும் கருதினர். வாளாவிராது காரணங்காண முயன்றனர். ஆண் பெண் என்பன படைப்புத் தொடக்கத்து ஒரே ஒரு பொருளாம் என்றும், தெய்வசாபத்தால் பிளவுபட்டு இரண்டாயின என்றும், அன்று முதல் ஒன்றாய் இணையப் பாடுபடுகின்றன என்றும் காதலுக்கு விளக்கம் கூறுவர் பிளேட்டோ! இது உமையொரு பாகம் அருத்தநாரீசுவரன். எனச் சிவனுக்கு ஆண்பாதி பெண்பாதி உருவம் கற்பிக்கும் இந்துப் புராணத்தைப் போன்றது. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப (தொல்.1038) உயர்ந்த பாலின் ஆணையால்-நல்லூழின் ஏவலால்-காதற் காட்சி நிகழும் என்பர் தொல்காப்பியர். கிழவன் கிழத்தியைக் காண்பான் என்றோ, கிழத்தி கிழவனைக் காண்பாள் என்றோ எழுவாயும் செயப்படு பொருளுமாகத் தொல்காப்பியம் நடை தொடுக்கவில்லை. முந்திக் காதலித்தவர் யார்? என்ற காதலியல்பு புலப்பட, கிழவனும் கிழத்தியும் காண்ப என இருவரையுமே எழுவாயாக, வைத்துக் காட்டும் நடைப்பாடு அறியத்தகும். இப்பாலாட்சியைச் சங்கப் புலவர்களாம் பேரிசாத்தனாரும் அம்மூவனாரும் ஒப்புப; பால்வரைந் தமைத்தல் அல்லது அவர்வயின் சால்பளந் தறிதற்கு யாஅம் யாரோ (பேரிசாத்தனார் (குறுந்.366) பிறிதொன் றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே. (அம்மூவனார் ஐந்.110) ஒரே பாடலின் ஆசிரியர் மோதாசனார் காதற் பாங்கை அழுந்த ஆராய்ந்தார். காதலராவார் வெவ்வேறிடத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. முன்பின் முகமறியாப் புதியவர்களாதல் வேண்டும் என்பதில்லை. நாள்தோறும் பல்கால் பழகிக்கொண்டு வரும் ஓர் இளையானும் இளையாளும் என்றோ ஒருநாள் திடீரெனக் காதல் தோன்றப் பார்த்தல் இயல்பேயாம். சிறுவன் சிறுமியாய் இருந்த பருவத்து இவ்விருவரும் தலைமுடி பற்றியிழுத்து அடித்துக் கொண்டனரே; செவிலியர் இடைமறித்து விலக்கவும் விடாது சண்டையிட்டனரே: இன்றே இணைந்த மலர்மாலை போல மண மக்களாக விளங்கக் காண்கின்றோம் நல்லூழின் விளையாட்டன்றே இது என்று தலைவன் தலைவியைச் சிறுபருவம் தொட்டு அறிந்தோர் அவ்விருவர்தம் உடன் போக்கைக் கண்டு பாலாற்றலை வியக்கின்றனர். ____________________________________________________ cf. Hans Licht- Sexual Life in Ancient Greece. p. 307. |