பக்கம் எண் :

அகத்திணைப் பாகுபாடு41

     இவனிவள் ஐம்பால் பற்றவும் இவளிவன்
     புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்
     காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
     ஏதில் சிறுசெரு உறுப மன்னோ
     நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
     துணைமலர்ப் பிணையல் அன்னவிவர்
     மணமகிழ் இயற்கை காட்டி யோயே.           (குறுந்.229)


     மோதாசனாரின் இப்பாடல் “பாலதாணையின்” என்ற
தொல்காப்பியத்துக்கு நல்விளக்கமாதல் காண்க. இளம்பூரணர்
தொல்காப்பியத்துக்கு முதலுரையாசிரியர். இவர் உரை உள்ள உரைகளுள்
ஏற்றமுடையது. ஒன்றே வேறே (1038) என்னும் நூற்பாவிற்கு,


    
“ஒருவரையொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சிவேட்கை
     தோற்றாமையின், பாலதாணையான் ஒருவரையொருவர்
     புணர்தற் குறிப்போடு காண்ப என்றவாறு”

     என அரிய விளக்கம் தருவர் இளம்பூரணர். கண்டதும் காதல்-கண்ட
முதற்பார்வையிலே காதல்கொண்டு விடுதல் என்ற கோட்பாட்டை ஒருபால்
மறுப்பர். ஆண் பெண் பாலர்களைச் சந்திக்கச் செய்வது விதியின்
வேலையன்று. அவர்கள் முதல்முறை சந்திக்கலாம்; பலமுறை சந்தித்தும்
இருக்கலாம். இச் சந்திப்பெல்லாம் பாலதாணையில்லை. முதல்நாள்
முதற்பார்வையிலோ, பின்னால் பல பார்வையிலோ, ஒரு பார்வையைக்
காதலோடு பார்க்கச் செய்வதே விதியின் ஆணை என்று தெளிவிப்பார்
உரையாசிரியர். இக்காதற் புணர்ச்சி-விதி கூட்டிய முதலுறவு-இயற்கைப்

புணர்ச்சி என்று பொதுவாகப் பெயர் பெறும். தலைவனும் தலைவியுமாம்
விதி முன்னரே உண்டெனினும் தோன்றாது, காலம் பார்த்து அடங்கியிருக்கும்.
காலமாவது இருவரும் காமம் நுகர்வதற்குரிய குமரப் பருவம். அப்பருவம்
வாயாதார்க்குக் கண்ணில் காதல்நோக்கம் எழாது; பிறர் கண்ணில் எழுந்த
காதல்நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் இராது. ஆதலின்
அடங்கியிருந்த விதி, புணர்தற்குரிய இருவரும் ஆளான பின்னர்தான்
வெளிப்படுவது முறையும் பயனுமாம். இதுகருதியே, தொல்காப்பியமும்
இறையனார் அகப்பொருளும், காமப்புணர்ச்சி என்று இம்முதற்புணர்ச்சிக்குப்
பெயரிட்டுள. இக்குறியீடு இயற்கைப் புணர்ச்சி என்ற குறியீட்டினும்
விரும்பத்தக்கது. இதுவரை ஆராய்ந்த காமத் தொடர்புபற்றி இறையனாரகப்
பொருள், திருக்கோவையார் உரையாசிரியர்களும் தொடைவிடைபட
எழுதியுள்ளனர்.