பக்கம் எண் :

29  வல்லிக்கண்ணன்

3

  யானை இடிகள்
அதிர்ந்து நடந்திட,
எட்டுத்திசைகளும் இடிந்து விழுந்திட,
பானைக்கருப்பைப்
பழிக்கும் பேய் வானக
மார்பினில் மின்னல்
சரங்கள் ஒளிர்ந்திட,
காற்றதன் கைகளைக்
குலுக்கி வாதாடியும்
பேய்போல் மழையைப்
படுத்திவைத்த பாட்டைக்
கேட்டீரோ?
நேற்று பார்த்தீரோ?
 
     இதற்குப் பின்னர் ந.பி. வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதினார்:

     “கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே
ஏற்படுவதென்பது பலருடைய கருத்து. அக்கருத்து சரியல்ல என்பது எதிர்க்கட்சி. தத்துவ
ரீதியாகப் பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண், உறக்கம், புணர்ச்சி
இவை ஒரு படியைச் சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர். இவைகளைப் பெறுவதற்கான
முயற்சியில் ஈடுபடுவது உள்ளம். அது ஒரு படி.

     இச்செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலக ரகசியத்தை அறியத் துடித்து நிற்கும்
அறிவு வழி ஒன்றுண்டு. உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு. வசனத்தின் வழி அறிவுநிலையைச்
சார்ந்தது. கவிதையின் தர்க்கபாதை உணர்விலேயே ஓடும். அறிவின் வரம்பை மீறி வசனம்
போகுமானால் அந்த நிமிஷத்திலேயே அது கவிதையாகிவிட்டது என்று நிச்சயிக்கலாம்.

     ‘தீ இனிது’ என்று பாரதியார் சொல்லுகிறார். இனிது என்ற சொல் ருசியைச் சார்ந்தது.
‘தீ சுடும்’ என்றால் வசனம் ‘தீ இனிது’ என்றால் கவிதை. இது ஏன்? வார்த்தை வெறும்
விஷயத்தை மட்டும் சொல்லாமல், உவமையைப் போல் உணர்வினிடம் பேசுமானால்
கவிதை பிறந்துவிடும். ‘தீ சுடும்’ என்னும் பொழுது சுடும் என்ற பதம் தீயின் குணத்தை
அறிவுக்குத் தெரியப்படுத்துகிறது. ‘தீ இனிது’ என்று சொல்லும் பொழுது அறிவு அதை
மறுக்கும்; தீயாவது இனிமையாவது என்று கலவரப்படும். ஆனால் உணர்ச்சி என்பது ஏது?
அதனால் தான் தீ இனிது என்பதை உணர்ச்சி ஒப்புக்கொள்ளுகிறது.

     இப்பொழுது கம்பரைக் கேட்போம்.
 
  ‘அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடைவந்து எழுந்த தென
எழுந்த தாழி வெண் திங்கள்’