பக்கம் எண் :

33  வல்லிக்கண்ணன்

  முனிந்தெமை ஏசு கின்றார்
மதுமலர்க்கொடி தான் என்றும்
மறுமுறை மலராதானால்
அதுவல எங்கள் நாட்டு
ஆன்ற செந்தமிழ் என்றென்றும்
புதுமலர் நித்த நித்தம்
பூத்திடும் புதிய இன்ப
மதுவினைச் சிந்தும் இந்த
மகிமைநீர் அறியமாட்டீர்.
விலைமகள் கற்பை ஒத்த
விதமல எங்கள் நாட்டம்
கலைகளை வாழ்த்த நாங்கள்
கண்டதோர் வழியில் வந்தோம்
மலைவுறோம் மூண்ட ஓரோர்
மனிதர்கள் வசவுக் கஞ்சோம்
நிலைகுலை வடையோம் எங்கள்
நேரிய வழியே செல்வோம்
(கலாமோகினி - 10)
 
     வசனகவிதை பற்றி கு.ப. ராஜகோபாலன் எழுதிய கட்டுரையும் பிரசுரமாயிற்று. அது
பின்வருமாறு:

     ‘வசன கவிதையை ஏளனமாகப் பேசுவது இப்பொழுது இலக்கிய ரசிகர்களிடையே
பாஷன்’.

     ‘அதென்ன வசனகவிதையா? இப்பொழுது யாப்பிலக்கணம் தெரியாதவர்களெல்லாம்
இப்படி ஆரம்பித்து விட்டார்கள். வாய்க்கு வந்ததை எழுதி வசனகவிதை என்கிறார்கள்’
என்று ஒரு சிலர் கேலி.

     ‘வசன கவிதை புதிதொன்றுமில்லை. பண்டைத் தமிழில் இருந்ததுதான் அது. அகவல்
வசனகவிதைதானே? இவர்கள் என்ன புதிதாகக் கண்டுபிடித்து விட்டார்கள்’ என்று மற்றும்
சிலர் தாக்குதல். வேடிக்கை என்னவென்றால் எதிர்ப்பவர்கள் இருதரப்பினர்களாக
இருக்கிறார்கள். ஒருவர் ஆட்சேபணை மற்றொருவரது போல் அல்ல. ஒருவர் வசன
கவிதையே கூடாது என்கிறார். மற்றவர் அது புதிது இல்லை என்கிறார். விசித்திரம்தானே
இது?

     யாப்பிலக்கணம் தெரியாததால் வசன கவிதையைப் பிடித்துக் கொண்டார்கள் அதை
எழுதுகிறவர்கள் என்ற வாதம் சுத்த அசட்டுத் தனத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
எழுதுகிறவர்களுக்குத் தேவையானால் யாப்பிலக்கணத்தைக் கற்றுக் கொள்ள எத்தனை
நாழிகைகள் ஆகும்? அதென்ன அப்படி எளிதில் கற்றறிய முடியாத வித்தையா? தமிழ்ப்
பண்டிதருக்கு வருவது கவிதை எழுத முனைகிறவனுக்கு வராமல் போய்விடுமா என்ன?
அப்படிப்பட்ட பிரம்ம வித்தை ஒன்றுமில்லை. அது நிச்சயம். யாப்பிலக்கணத்தைப்
படிக்காமல்கூட கண்களை மூடிக்கொண்டு செய்யுள் பாடலாம்.

     அது கிடக்கட்டும். வால்ட்விட்மனும், எட்வர்டு கார்பெண்டரும் ஆங்கில
யாப்பிலக்கணம் கற்றறியத் தெரியாமல்தான் கவிதை எழுதினார்களோ? புது
யாப்பிலக்கணமே ஏற்படும்படி வங்காளியில்