பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 66

இதை நன்றாய் உணருகிறது.

     சிறுகதைகள் எழுதிய காலத்தில் தலையுமில்லாமல் காலுமில்லாமல் இதென்ன என்று
சொன்னவர்கள் அநேகர்.

     சிறுகதையை ரசிப்பதற்கு எப்படிச் சில காலம் சென்றதோ, அதே போல் இப்புதுக்
கவிதையையும் ரசிக்க சில காலம் போகவேண்டி இருக்கலாம். திறந்த மனத்துடன்
ஈடுபட்டால் கவிதையைக் காணலாம். ஓசையுடன் கூடக்காணலாம்.”

     (இந்தக் கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்து, இப்போது அது எனக்குப் பயன்படக்கூடும்
என்று கருதி எனது பார்வைக்கு அனுப்பி உதவிய இலக்கிய நண்பர் ஓட்டப்பிடாரம்
ஆ.குருசுவாமிக்கு என் நன்றி உரியது.)

     பிச்சமூர்த்தி இயற்கையின் அழகுகளையும் தன்மைகளையும் நன்கு கண்டுணர்ந்தவர்.
வாழ்க்கையை விழிப்புடன் ஆராய்ந்தவர். இயற்கையும் வாழ்வும் கற்பிக்கும் பாடங்களைக்
கவிதைக் கருத்துக்களாகத் தர முயன்றவர்.

     அழகின் பக்தரான அவர் கூறுகிறார்:
    
  வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு;
வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்.
பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்;
அழகென்னும் கிளியை அழைத்தேன்.
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்
 
     வாழ்க்கையை, இயற்கை இனிமைகளை ரசித்து அனுபவிக்கும்படி தூண்டுபவை அவர்
கவிதைகள்.
 
  மனக்கிளியே! ஏங்கி விழாதே.
சந்நியாசியின் மலட்டு வார்த்தையை ஏற்காதே.
உடல் பஞ்சரமல்ல.
புலன்கள் பஞ்சரத்தின் கம்பியல்ல-
வெளியும் ஒளியும் நுழையும் பலகணி.
தெய்வப் பேச்சு கேட்கும் காது.
தெய்வ லீலையைப் பார்!
அதோ வானத்துக் கோவைப்போல் பரிதி தொங்குகிறான்!
மலரின் மூச்சிலிருந்து மாட்டின் குமுறல் வரையில்,
குழலின் பேச்சிலிருந்து கடலின் ஓலம் வரையில்;
நாதமே அசைகிறது;
குரல் கொடுக்கிறது
மனமே! காய்கனிகளின் ரஸமே தெவிட்டா அமுதம்.
மலர்களின் மணமே தெய்வ வாசனை.