பக்கம் எண் :

67  வல்லிக்கண்ணன்

  ஸ்பர்சமே தெய்வத் தீண்டல்.
பார்வையே ஒளியின் அலை.
உலகின் ஒளிகளே பரத்தின் நாதம்.
மனமே! புலன்கள் தளையல்ல,
விடுதலைக் கால்வாய்.
அவைகளுக்கு சக்தி தந்தவன் ஈசன்-
அவனை அறிய,
ஆதி அழகில் மூழ்கி எழ,
கிளியே! ஈசனே ஊனாய், உருவாய், மலர்ந்திருக்கிறான்.
புலன்களொரு ஏணி,
ஏணியைத் தூற்றாதே!

(கிளிக்குஞ்சு)


     வாழ்க்கை என்பதே போராட்டம்தான். அதில் சோனியாகி ஒடுங்கிப் போவதில்
பயனில்லை; இன்பமுமில்லை. எதிர்த்து நின்று போராட வேண்டும். இயற்கையும்
அதைத்தான் கற்றுத் தருகிறது. இந்தத் தத்துவத்தை பிக்ஷு ‘ஒளியின் அழைப்பு’ என்ற
கவிதையில் விளக்குகிறார்.

     பட்டப்பகலில் இரவைக் காட்டும் நிழல் கொண்ட பெரிய மரம். அதனடியில் ஓர்
கமுகு.
 
  ‘ரத்தம் செத்த, சோனிக் கமுகு,
சோனியாவானேன்?
அதான் வாழ்க்கைப் போர்!’

     பெருமரம், கபந்தன் தேவையோடு, சிறு மரத்தைச் சுரண்டுகிறது. ஏழைக் கமுகு தன்
பங்கை, ஒளி, வெளி, காற்று, நீர் அவ்வளவையும்--பறிகொடுத்து நிற்கிறது. வாழ்க்கைப்
போர் அது.
 
  ‘கமுகு நோஞ்சலாகாமல் என்ன செய்யும்?
அதற்காக விதியென்று பேசி, செங்குத்தாய் வளருமோ?
தியாகம் செய்தேனென்று புண்யம் பேசுமோ?
அட பிதற்றலே!
விதியைப் போற்றினால் தமஸில் உழலலாம்
பிறந்த இடத்தில் வளர்வேனென்றால் சாவை உண்ணலாம்.
ஆ! கமுகறியும் வளர்ச்சியின் மந்திரம்.

     சோனிக் கமுகு குறுக்கே படர்கிறது. பிறவி இருளைத் துளைத்து, சூழலின் நிழலை
வெறுத்து, முகமுயர்த்தி, விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது.
அமிர்தத்தை நம்பி, ஒளியை வேண்டி, பெருமரத்துடன் போட்டியிடுகிறது. அதுவே
வாழ்க்கைப் போர்.
 
  ‘முண்டி மோதும் துணிவே இன்பம்.
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி’
நானும் ஒரு கமுகு, சோனிக் கமுகு!
சூழவும் எவ்வளவு பெரிய, பழைய, முதிய இருட்டு!
பழமை என்ற பிரமையில், அரையொளியில்,
பொய்களின் பிணங்கள் எப்படி உயிருடன் நடிக்கின்றன!