பக்கம் எண் :

32நாமக்கல் கவிஞர்

  
தருணம் இதுவே
 

பல்லவி
 

  தருணம் இதுவே. தருமம் இதுவே
தமிழா! எழுந்திரடா.
 
 

அனுபல்லவி
 

  கருணையின் வடிவாம் கலைகளின் முடிவாம்
காந்தி என்றொருமுனி  ‘சாந்தி’ என்றழைக்கிறார்,
 
(தரு)
 

சரணம்
 

  வள்ளுவர் வாழ்க்கையும் திருக்குறள் வகுத்ததும்
தள்ளரும் தாயுமா னவருடல் தகித்ததும்
வள்ளலி ராமலிங்க சுவாமிகள் வடித்ததும்
கள்ளமில் பட்டினத்தார் கவலையும் இதற்கே.
 
(தரு)
 
  சைவர்கள் பூண்டதும் சமணர்கள் மாண்டதும்
வைணவர் வருத்தமும் பௌத்தர்கள் வாட்டமும்
மையற ஏசுநாதன் சிலுவையில் மரித்ததும்
மஹம்மது நபியவர் மகிழ்ந்ததும் இதற்கே.
 
(தரு)
 
  கம்பன் கவித்திறமும் வில்லியின் சந்தமும்
செம்பொருள் சேக்கிழர் தேடித் திரிந்ததுவும்
பைம்பரஞ் சோதியார் பாடிப் பகர்ந்ததுவும்
நம்பின யாவரும் நவின்றதும் இதுவே.
 
(தரு)
 
  நால்வர் தேவாரமும் ஒளவை நன்மொழிகளும்
ஆழ்வா ராதியர் அனுபவ உரைகளும்
பால்வரும் திருப்புகழ் ஆகிய பனுவலும்
மேல்வரும் கதிக்கென விளம்பிய திதுவே.
(தரு)