பக்கம் எண் :

8நாமக்கல் கவிஞர்

  
  தேவா ரம்திரு வாசகமும்
     திகழும் சேக்கி ழார்புகலும்
ஓவாப் பெருங்கதை, ஆழ்வார்கள்
     உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னதெல்லாம்
     தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
     பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
     நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
     பாடலும் தமிழன் தரும் புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
     கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
     நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
     சிறந்தவர் அவனினும் எங்கேசொல்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
     வேலைத் திறத்தால் ஒளி பண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
     உண்மை; சரித்திரம் அசைபோடும்
இழவில் அழுதிடும் பெண்கூட
     இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
     யாவுள தண்ணுமைப் பேதமெலாம்
வாழும் கருவிகள் வகை பலவும்
     வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.