பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்163

ஒழுக்கமுமே மக்களுக்கு மதிப்பைத் தருவன; பிறப்பு மட்டும் அன்று.
இச்சிறந்த கொள்கையையும் நாலடியார் எடுத்துரைக்கின்றது.
 
  ‘‘களர்நிலத்துப் பிறந்த உப்பினைச், சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோர் ஆயினும், கற்றறிந்தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.                 (பா.133)
 

களர் நிலத்திலே ஒன்றும் விளையாது; மட்டமான நிலம். ஆயினும்
அந்த நிலத்திலே விளைந்த உப்பை அறிஞர்கள் ஒதுக்கிவிடமாட்டார்கள்.
நல்ல விளைநிலத்திலே பிறந்த நெல்லைக் காட்டினும் சிறந்ததாகக்
கொள்ளுவார்கள். அதைப்போலக் கடைப்பட்ட குடியிலே பிறந்தவராயினும்,
கற்றறிந்தோர் உயர்ந்த இடத்திலே பிறந்தவர் போல் வைத்துப்
பாராட்டப்படுவார்கள்’’.

இச்செய்யுள் கல்வி கற்றவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுவார்கள்
என்பதை எடுத்துக்காட்டிற்று. மேற் காட்டியவைகளால் கல்வி, அறிவு,
ஒழுக்கங்களால், பிறப்பினால் ஏற்படும் உயர்வு தாழ்வுகள் ஒழியும் என்பதை
அறியலாம்.

வடக்கும் தெற்கும்

வடநாடு புண்யபூமி; தென்னாடு பாவ பூமி என்று ஒரு கொள்கையுண்டு.
வட நாட்டில் உள்ளவர்கள் புண்யம் செய்வார்கள்; சுவர்க்கம் பெறுவார்கள்;
தென்னாட்டினர் வடநாட்டிற்குச் சென்றால் ஒழுக்கத்திலே உயர்ந்து
உத்தமராக மாறுவர். வடநாட்டினர் தென்னாட்டிற்கு வந்தால்
ஒழுக்கங்கெடுவார்கள்; கீழ்மைக்குணம் அடைவார்கள். இத்தகைய நம்பிக்கை
பண்டைக்காலத்திலிருந்தது.