பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
11

உர

உரிச்சொற்கு இலக்கணமாவது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட் குரியவாய் வருதலே யாம்" என்று உரை வரைந்தார்.

    நச்சினார்க்கினியரும் இவ்வாறே உரை கூறினார்.

    எல்லாச் சொற்களும் பெரும்பாலும் இசை குறிப்புப் பண்புபற்றியே தோன்றி யிருத்தலின், இசை குறிப்புப் பண்பிற்குரியன உரிச்சொல்லென்பது பொருந்தாது; பொருந்துமாயின் இசை குறிப்புப் பண்புபற்றிய சொற்களெல்லாம் உரிச்சொல்லாதல் வேண்டும். அங்ஙன மாகாமையும், இசையுங் குறிப்பும் பண்பிலடங்குதலும், பண்புப் பெயர் அறுவகைப் பெயருள் ஒன்றாதலும், ஒருசார் தொழிலும் பண்பின்பாற்பட்டுத் தொழிற் பண்பெனப் படுதலும், வினைச்சொற்களிற் பெரும்பாலன இசையுங் குறிப்பும்பற்றி வருதலும், இலக்கண முணர்ந்தார்க் கெல்லாம் எளிது புலனாம்.

    மெய்தடுமாறல் சொற்களுக்கெல்லாம் பொதுவியல்பாதலின் அதுவும் ஒரு சிறப்பிலக்கணமன்று.

    ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமை யும் பெயர் வினை யிடை யுரி நான்கிற்கும்  பொதுவான திரிசொல் இலக்கணமாதலை,

     ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்  
     வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்  
     இருபாற் றென்ப திரிசொற் கிளவி

(தொல். 882)

என்பதனாற் கண்டுகொள்க.

    பெயர்க்கும் வினைக்கும் உரிமை பூண்டு நிற்பன உரிச்சொல் லெனின், இடைச்சொல்லும் அங்ஙனம் உரிமை பூண்டு நிற்றலின் அதுவும்   இலக்கணமன்மை யறிக.

    இனி, உரிச்சொல் இலக்கணந்தான் என்னையோ வெனிற் கூறுதும்:

     சொல்லெனப் படுப பெயரே வினையென்  
     றாயிரண் டென்ப அறிந்திசி னோரே

(தொல். 643)

என்பதால் இலக்கண வகையிற் சொற்கள் பெயர் வினை என இரண்டே யென்பதும், இடைச்சொல்லாவன அப் பெயரிடையும் வினையிடையும் வரும் உறுப்புகளென்பதும், அவ் வுறுப்புகளின்றிப் பெயர்ப் பகுபதங்களும் வினைப்பகுபதங்களுமில்லை யென்பதும், தனித்து வரும் இடைச்சொற்க ளெல்லாம் பெயர் வினை யொன்றனுள் அடங்கு மென்பதும், உரிச்சொல் லென்பதோர்  இலக்கணவகைச் சொல்லன் றென்பதும், அது பெயராகவும் வினையாகவு மிருக்குமென்பதும், செய்யுட்குரிய திரிசொற்கட் கெல்லாம் பொருளுணர்த்துவதே உரியியலென்பதும், செய்யுட்குரிய சொற்களே உரிச்சொல் லெனப்பட்டன வென்பதும் அறியப்படும்.