New Page 1
"அங்ஙனமாகிய நிலக்குறைக்குச்
சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை
இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் வாழ்வானாக வென்றவாறு" என்றதனால், இன்றுள்ள முகவை மதுரை
நெல்லையாகிய மும் மாவட்டப் பாண்டிநாடு பழம்பாண்டி நாடன்றென்பதும், சேர சோழ நாடுகள் முதற்காலத்தில்
பனிமலை வரை பரவியிருந்து பின்னர்ப் படிப்படியாய்த் தெற்கே தள்ளி வந்துவிட்டன என்பதும், பெறப்படும்.
பழம் பாண்டி நாடான குமரிக்கண்டம்
முழுதும் முழுகிப் போனமையினாலும், தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட தனித் தமிழிலக்கியம்
அனைத்தும் அழிக்கப்பட்டுப் போனமையினாலும், தமிழ்நாட்டு முதற்கால வரலாற்றிற்குத் தொல்பொருட்
கலைத்துறை துணைசெய்யாதென்று தெற்றெனத் தெரிந்துகொள்க.
ஆகவே, திரு. தி. நா சுப்பிரமணியன்
குறித்த கி.மு. 3ஆம் நூற்றாண்டுப் பிராமிக் கல்வெட்டுகளும், 19-1-1979ஆம் பக்கல் இந்துச் செய்தித்தாளில்
வெளியிடப்பட்ட தகடூர் மாவட்ட அம்மன்கோயிற்பட்டிப் பிராமிக் கல்வெட்டும், வடவரும் வடநாட்டு
மதங்களும் தென்னாட்டிற் புகுந்த இடைக் காலத்தனவாதலாலும், வடவர்க்கு இடப்பட்ட தானங்களைக்
குறிப்பனவாதலாலும், வடவெழுத்திற் பொறிக்கப்பட்டன வாதலாலும், பண்டைத் தமிழெழுத்தை யறிவிக்குஞ்
சான்றுகளாகா.
குமரிநாட்டுத் தொடக்கக் கால
வரலாற்றை அறிதற்குத் துணையாக, இன்று எஞ்சியுள்ள பழம்பொருட்டுறைச் சான்று தமிழ் என்னும்
மொழி ஒன்றே. ஏட்டெழுத்தும் வெட்டெழுத்தும் கருவி வேறுபாட்டால் வடிவு வேறுபடுதற்கு இடமிருத்தலாலும்,
பொதுவாக ஏட்டெழுத்து பெருவழக்கும் வெட்டெழுத்து அருவழக்கும் உடையனவாதலாலும், வடவர் தென்னாடு
வந்ததிலிருந்து தமிழைக் கெடுத்தும் குறைத்தும் மறைத்தும் வருவதனாலும், மூவேந்தரும் ஆரியப் பூசாரிகட்கு
அடிமையராகிக் கல்வித் துறையிலும் மொழித் துறையிலும் அவர் விருப்பம்போற் செய்துகொள்ள விட்டு
விட்டமையாலும், தமிழையும் தமிழரையும்பற்றித் தமிழரால் தமிழில் எழுதப்பட்ட பண்டை ஏட்டுச்சுவடி
ஒன்றும் இன்றின்மையால், சமண புத்தக் கல்வெட்டுகளைக் கொண்டு குமரித் தமிழெழுத்தைக் காண முயல்வது,
ஆமணக்கு விதைத்து ஆச்சா விளைப்பது போன்றதே.
பிராமியெழுத்துப் பல்வேறு வடிவத்தில்
வழங்கி அசோகன் காலத்தில் வளர்ச்சியடைந்ததாகத் தெரிகின்றது.
திரு. தி. நா. சுப்பிரமணியனார்,
தம் 'பண்டைத் தமிழ் எழுத்துகள்' என்னும் பொத்தகத்திற் பின்வருமாறு வரைகின்றார்:
"சரித்திர
வாயிலாக நாம் அறியும் காலத்திலேயே பிராமி நெடுங் கணக்கு நிலையை அடைந்துவிட்டது. அஃது அந்த
நிலையை எப்பொழுது
|