பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
13

7

7. இடுகுறிப் பெயர்

    'அ, ஆ என்றற் றொடக்கத்தன, இடுகுறிச்   சிறப்புப் பெயர்' என்பது நன்னூற் பழையவுரை.

    அ, ஆ என்பவை எழுத்துகளே யன்றி அவற்றின் பெயர்களாகா. எழுத்தாவது ஒலி. ஒரு பொருள் வேறு, அதன் பெயர் வேறு. குடம் என்பது ஒரு பொருள். அப் பொருள் வேறு; அதைக் குறிக்கும் குடம் என்னும் சொல் வேறு. அ, ஆ என்பவை எழுத்துகளாகிய பொருள்கள். உயிர், குறில், நெடில் என்பனவே அவற்றின் பெயர்கள், ஒரு பொருள் பெயரின்றியும் யாதானுமோர் புலனாகச் சுட்டப்படும். அ, ஆ என்பவை பெயர்களாயின் அவற்றாற் குறிக்கப்படும் பொருள்கள் அவையன்றி வேறாதல் வேண்டும். அங்ஙன மின்மையின் அஃதுரை யன்மை யறிக.

    அன்றியும் இடுகுறியென்றோர் பெயர் யாண்டுமிலது.

     எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே,
     மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

    அற்றேல், மக்கட்கிடும் இயற்பெயர்களோவெனின், அவையும் முதலாவது இடப்படும்போது காரணப் பெயர்களாகவே யிருந்திருத்தல் வேண்டும். (எ-டு : முருகன் = இளைஞன். Victor =  வெற்றி பெற்றவன்) பின்னரும் அவை, தெய்வப்பற்று, அதிகாரிமாட்டன்பு, இனமுறை, இன்னோசை, விழுமிய பொருள், உயர்நோக்கம் என்பவற்றுள் ஒன்று பற்றியே மக்கட்கிடப்பட்டு வருகின்றன.

    மக்கட்கிடப்படும் இயற்பெயரெல்லாம் முதலாவது பொருள் குறித்தனவென்றும், பின்பு மக்கட்பன்மையால் மகன்றோறும் புதுப்பெய ரிடுதலருமைபற்றிப் பழம்பெயர்களே மீண்டும் மீண்டும் பிறர்க்கிடப்படு கின்றன வென்றும் பெயின் (Bain) என்னும் ஆங்கிலப் புலவர் தம் இலக்கணத்திற் கூறியுள்ளார்.

    இடுகுறிப்பெய ருண்டென்னும் இழுக்குணர்ச்சியே சிலர் தவற்றா ராய்ச்சிக்கும் காரணமாயிருந்து வருகின்றது.

    தாவரங்களுள் இடுகுறிப் பெயருடையவை யெல்லாம் தமிழ்நாட்டிற் குரியவென்றும், காரணப்பெய ருடையவை யெல்லாம் அயல்நாட்டிற் குரியவென்றும், வெற்றிலை  (வெறுமை + இலை)  மிளகாய் (மிளகு + காய்) முதலியவை காரணப் பெயருடைமையால் அயல்நாட்டினின்று வந்தவை யென்றும், வாழை, வேம்பு முதலியவை இடுகுறிப்பெயருடைமையால் தமிழ்நாட்டிற்குரிய வென்றும், 'இயற்கைப்பொருட் கட்டுரை' என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது.