பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
44

New Page 1

    பெண்டு + ஆம் + ஸ்திரி = பெண்டாட்டி கண்+ஆம்+ஸ்திரி= கண்ணாட்டி, பொம்மனாட்டி. கம்மனாட்டி என்பவையும் இவ்வாறே வந்திருக்கவேண்டும்."

    இனி இதன் மறுப்பு விளக்கம் வருமாறு :

    தமிழில், ஆண்பால் பெண்பால் விகுதியேற்படாத முதுகாலத்தில், அதாவது உயர்திணை அஃறிணை என்னும் திணை வேறுபாடு தோன்றாத பழங்காலத்தில், ஒருமைப்பால் பன்மைப்பால் என்னும் இருபால்களே இரு திணைக்கும் பொதுவாக வழங்கி வந்தன. முதற்காலத்திலேயே பகுத்தறிவுள்ளதும் இல்லதும் எனப் பொருள்களைத் தமிழர் இரு பகுப்பாகப் பகுத்திருக்க முடியாது. நாகரிகமும் அறிவு வளர்ச்சியுமாகிய பண்பாடடைந்த பின்னரே, அவர் அவ்வாறு செய்திருத்தல் வேண்டும். இன்றும், இருதிணைக்கும் பொதுவாகப் பல சொற்களும் விகுதிகளும் வழங்கக் காண்கின்றோம். அவை முந்துகால மொழிநிலையைக் காட்டும் எஞ்சு குறிகளாகும்.

    எ-டு :

சொற்கள்

     ஆண், பெண், தாய், தந்தை,  பிள்ளை, குட்டி, தான், தாம்.
       

விகுதிகள்

     கத்தரிப்பான் = கத்தரிக்கின்றவன் (உயர்திணை ஆண்பால்)
     கத்தரிப்பான் = கத்தரிக்கோல் (அஃறிணை ஒன்றன்பால்)
     கண்ணி = கண்ணையுடையவள் (உயர்திணைப் பெண்பால்)
     கண்ணி = கண்ணையுடையது (அஃறிணை ஒன்றன்பால்)
     கொல்லி = கொல்கின்றவன் (உயர்திணை ஆண்பால்)
     கொல்லி = கொல்கின்றவள் (உயர்திணைப் பெண்பால்)
     கொல்லி = கொல்கின்றது (அஃறிணை ஒன்றன்பால்)
   
     இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்  
     திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்  
     நினையுங் காலைத் தத்தம் மரபின்  
     வினையோ டல்லது பால்தெரி பிலவே

(657)

   
     இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே  
     முறைப்பெயர்க் கிளவி தாமே தானே  
     எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து  
     சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு  
     அன்னவை தோன்றின் அவற்றொடுங் கொளலே

(659)

என்னும் தொல்காப்பியச் சூத்திரங்கள் இங்குக் கவனிக்கத் தக்கன.