10
10. குற்றியலுகரம் உயிரீறே (2)
'செந்தமிழ்ச் செல்வி' 36ஆம்
சிலம்பு 10ஆம் பரலில், புலவர் திருமுதுகுன்றம் என்பார், குற்றியலுகரம் பற்றி வரைந்துள்ள கட்டுரையில்,
குற்றியலுகரம் மெய்யீறென்று பெரும்புலவர் வேங்கடராசுலு அவர்களும், அஃது உயிரீறென்று யானும்,
மாறுபட்டுக் கூறும் கூற்றிரண்டனுள் ஒன்றைத் துணிவார் போன்று தொடங்கி, பழமொழிக் கோமுட்டியார்
போல் இருவர் மாறுகோள் இரண்டுந் தழுவல் என்னும் மதம் பற்றி, அஃது உயிரீறும் மெய்யீறுமல்லாத
சார்பெழுத்தென்று முடிபு கட்டியதுமன்றி, அதைத் தொல்காப்பியர்மீது ஏற்றியுமுள்ளார்.
பெரும்புலவர் வேங்கடராசுலு
புலமையில் என்னினும் மிகப் பெரியாரே. ஆயின், அவர் தமிழ்ப் பற்றில்லாத் தெலுங்கராதலின்,
ஆரிய அடிப்படையில் தமிழை ஆய்ந்து திரிபுணர்ச்சியால் சறுக்கினார்.
யான் திருச்சிப் புத்தூர் ஈபர்
கண்காணியார் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியனாயிருந்த பொழுதே, திருவையாற்று அரசர் கல்லூரித்
தமிழ் மாணவர் விருப்பத்துக்கிணங்கி அங்குச் சென்று, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில்,
குற்றியலுகரம் உயிரீறே யென்று நிறுவினேன். அதன் பின்னர் தமிழ்நாடு முழுமைக்கும் பயன்படுமாறு
ஒரு கட்டுரையும் வரைந்தேன்.
ஏறத்தாழக் கால் நூற்றாண்டிற்குப்
பின், இன்று புலவர் முதுகுன்றனார் மாணவர் முதுக்குன்றுமாறு ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதற்கு மறுப்பே
தேவையில்லை, ஆயினும், இந்நாள் மாணவர் மயங்கற்கிடமா யிருத்த லானும், இத்தகைய இலக்கணச் செய்திகளை
வரையறுத்துக் கூறும் மதுகை தலைமைப் பதவித் தமிழ்ப் பேராசிரியர்க்கும் இன்மையானும், "தட்டிக்
கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பெருஞ்சண்டன்" என்றாதலானும், இம் மறுப்பை எழுதத் துணிந்தேன்.
தமிழ் ஆசிரியர், சிறப்பாகப் புலவர் கல்லூரி மாணவர், அனைவரும் இதை ஊன்றி நோக்கி உண்மை
தெளிக.
1. "தொல்காப்பியர்
கூறும் குற்றியலுகரத்துக்கும், நன்னூலார் கூறும் குற்றியலுகரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
குற்றியலுகரத்தின் தன்மைபற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்துகள் இயற்கையோடு
|