பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
9

    வாய்பாடு என்பதிலோ வெனின் அதிலும் படு என்னும் துணை வினையே முதனிலை திரிந்ததாதல் வேண்டும்.

4. எழுவாயுருபு

     அவற்றுள்,
     எழுவா யுருபு திரிபில் பெயரே

என்னும் சூத்திர வுரையில், தமக்கென வாராய்ச்சி யின்றிச் சுவாமிநாத தேசிகர் போன்ற பிறர் கூற்றுகளையே கொண்டு கூறும் ஒருசார் ஆசிரியர்,

    "எழுவாய் வேற்றுமைக்கு ஐ முதலானவை போன்ற உருபு இல்லா திருந்தாலும், உரையிற்கோடல் என்கிற உத்தியால் ஆனவன், ஆகின்றவன், ஆவான்; என்றவன், என்கின்றவன், என்பவன்; அவன் முதலாக ஐம்பாலிலும் வருகிற சொல்லுருபுகள் உண்டெனக் கொள்க" என்று வழுப்பட வுரைத்தனர். அவர் தமிழிலக்கணத்தையே அறியார்.

    எழுவாய்க்கு இயற்கை வடிவன்றி வேறுருபில்லை யென்று தொல்காப்பியமும் நன்னூலும் துலங்கக் கூறும்.

    ஆனவன் முதலிய மூன்றும், என்றவன் முதலிய மூன்றும் முறையே ஆ (ஆகு), என் என்ற வினைப்பகுதிகளினின்றும் பிறந்த வினையாலணையும் பெயர்கள். வேற்றுமை உருபெல்லாம் பெயர்க்கு ஈறாயன்றித் தமித்து வாரா. இடைச்சொல்லாதலின் தமித்து வருவதும் பெயர்ச்சொல்லா யிருப்பதும், ஐம்பால் காட்டுவதும் அவற்றுக்கு இலக்கண மாகா. ஒரு பெயர்க்கு மற்றொரு பெயர் உருபாய் வருமென்றல் எட்டுணையும் பொருந்தாத தொன்றாம்.

    கொண்டு, நிமித்தம் முதலிய வினையும் பெயரும் பிற வேற்றுமை களுக்குச் சொல்லுருபாய் வருமே யெனின், அவையும் அவ்வவ் வேற்றுமைப் பொருள்பட வருமே யன்றி அவைதாமே வேற்றுமையுரு பன்மையும், இடைச்சொல் லாகாமையும் அறிந்துகொள்க.

    ஆனவன் முதலிய ஆறு பெயர்களும், சாத்தன், சாத்தி என்ற பெயர்களைப் போலவே ஆனவனை, ஆனவனால், ஆனவனுக்கு என எண் வேற்றுமைப்படுதலின், அவை பெயர்களேயன்றி வேற்றுமை யுருபாகாமை யறிக. பெயருக்கு வேற்றுமை யன்றி வேற்றுமை யுருபிற்கு வேற்றுமை யின்று.

    சாத்தன், சாத்தி முதலிய பெயர்கள் மிகக் குறுகி யிருத்தலின்,   கட்டுரை வகையான் ஓசை நீடற்பொருட்டு சாத்தனானவன்,   சாத்தியானவள் என்று சிலராற் கூறப்படுவதன்றிப் பிற வேற்றுமை யுருபுகளைப் போல எவ்விடத்தும் எல்லாரானும் கூறப்படுவதல்ல.

    ஆகவே முதல் வேற்றுமைக்கு உருபுண்டென்பது போலியுரையென மறுக்க.