வகையில், திருந்தாமொழிக்குத் துடாகோட்டா முதலிய
மொழிகளையும், திருந்திய மொழிக்குத் தெலுங்கு
கருநடம் முதலிய மொழிகளையும்; கலவைமொழி வகையில்,
திருந்தாமொழிக்குக் கோண்டி பத்ரி முதலிய மொழிகளையும்,
திருந்திய மொழிக்குத் தெலுங்கு ஆங்கிலம் முதலிய
மொழிகளையும்; இருமொழிக் கலவைக்கு மராட்டி
தெலுங்கு முதலிய மொழிகளையும், பன்மொழிக் கலவைக்கு
ஆங்கிலம் இந்தி முதலிய மொழிகளையும் எடுத்துக்காட்டாகக்
கூறலாம்.
மொழியின் இயல்பான தோற்றத்தை ஓர்
இயன்மொழியால் அறியமுடியுமே யன்றித் திரிமொழியால்
அறியமுடியாது. மொழிநூற் பெரும் புலவர் மாக்கசு முல்லர்
சீனமொழியினின்றும் தென்கண்டத் தீவுகளின்
மொழிகளினின்றுமே மொழியின் இயல்பான தோற்றத்தை
யுணர்ந்தார்.
உலகப் பெருமொழிகளில் வடமொழி திரிபு
முதிர்ந்ததாதலின், அதனைக்கொண்டு மொழியின்
இயல்பான தோற்றத்தையறிய விரும்புவார், பேரன்
பாட்டனைப் பெற்றவன் என்று கொள்ளுபவரேயாவர்.
தமிழோ இயன்மொழியாயும் மிகத் திருந்தியதாயும்
மொழிவளர்ச்சியின் பல நிலைகளைக் காட்டக்கூடியதாயு
மிருத்தலின், மொழியின் இயல்பான தோற்றத்தையறிதற்குத்
தலைசிறந்த வாயிலாகும்.
மொழி முதலாவது தனித்தனி ஒலிகளாக அல்லது
அசைகளாகவே தோன்றிற்று. ஒரு கருத்து இப்போது பல
சொற்களுள்ள வாக்கியமாக அமைந்தாலும், அது முதலாவது
வாக்கியமாகத் தோன்றவில்லை. ஏனெனின்,
வாக்கிய அமைப்புக்கு வேண்டும் சொற்களெல்லாம்
அப்போது இல்லை. மனிதனுக்குக் கருத்துப்
பெருகப்பெருக ஒலிகளும் அல்லது சொற்களும்
பெருகிக்கொண்டே வந்தன. மெள்ள மெள்ளச் சிறிது
சிறிதாய்ப் பெருகிக் கொண்டு வந்த அவ் வொலிக்கூட்டமே
மொழியாகும்.
ஒருவனின் உள்ளத்திலெழும் கருத்து வேறு;
அதனைப் பிறர்க்குப் புலப்படுத்தும் ஒலி வேறு. ஒரு
கருத்தைப் புலப்படுத்த ஒரு வாக்கிய வொலியே வேண்டும்
என்னும் யாப்புறவில்லை. நன்றாய்ப் பேச்சுக் கற்ற
பிள்ளைகூட ’அம்மா! எனக்குச் சோறு வேண்டும்’ என்னும்
நாற்சொற்றொடரை ’அம்மா! சோறு’ என்று இரு
சொல்லில் அடக்கிவிடுகிறது. பெரியோர் பேச்சிலும்,
‘நீ அங்கே போனாயா?’ என்னும் வினாவிற்குப் ‘போனேன்’
அல்லது ‘ஆம்’ என்னும் விடையும், ‘அவர் என்றைக்கு
வருவார்?’ என்னும் வினாவிற்கு ‘நாளைக்கு’ என்னும்
விடையும் ஒவ்வொரு சொல்லாயே நின்று ஒவ்வொரு
கருத்தைத் தெரிவிக்கின்றன. ஒருசில சொற்களையே
கற்ற குழந்தை, ‘எனக்குப் பால் வேண்டும்’ என்னுங்
கருத்தைப் பா பாசி பாலு பால் என்னுஞ் சொல் வடிவங்களுள்
ஒன்றினாலேயே குறிக்கின்றது. அதற்குமேற் சொல்ல
அதனிடம் சொற்களில்லை. இந் நிலையை அயன்மொழியை
அரைகுறையாய்க் கற்றவரிடமும் காணலாம். ஆங்கிலம்
நன்றாயறியாத ஒருவன் ஓர் ஆங்கிலக் கடைகாரனிடம்
சென்றால்,
|