முடிவு
குமரிநாடே (Lemuria)
மாந்தன் தோன்றிய இடம். தமிழன் தோன்றிய
இடமும் அதுவே. குமரிநாட்டு மொழியாகிய தமிழே உலக
இலக்கிய மொழிகட் கெல்லாம் மூலத் தாய் (Progenitor).
வடமொழிக்கும் தென்மொழிக்கும்
நூற்றுக்கணக்கான இன்றியமையாத சொற்கள்
பொதுவாயிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் வேரும் (root),
அடியும் (stem)
தமிழில்தான் உள. வடமொழி இற்றை நிலையும்
சமற்கிருதம் என்னும் பெயரும் பெற்றது ஆரியர்
இந்தியாவிற்கு வந்தபின்னரே (கி.மு. 3000). அதற்கு
முன் அது செருமனியம், கிரேக்கு, இலத்தீன் முதலிய
மொழிகளைப் போன்றேயிருந்தது. வடக்கினின்று
தமிழ்நாட்டிற்கு வந்ததினாலேயே அது வடமொழி
எனப்பட்டது. தமிழோ, கி.மு 10000 ஆண்டுகட்கு முன்னமே
குமரிநாட்டில் தானே தோன்றித் தானே முழுவளர்ச்சி
யடைந்த தனிமொழி. தென்மொழியும் வடமொழியும்
முறையே உலகப் பொதுமொழி வடிவத்தின் முன்னிலையும்
பின்னிலையுமாகும். இவை இரண்டும் ஒன்று கூடியது
அளைமறி பாம்பும் அரத்த வோட்டமும் போலக்
கொள்க.
வடமொழியுட்பட ஆரிய மொழிகட்கும்
தமிழே மூலத்தாயென்பது, இம் மொழிநூலின் மூன்றாம்
மடலத்தின் வெள்ளிடை மலையாய் விளக்கப்படும்.
சேய்மையும் அண்மையுமாகிய இருவகைச்
சுட்டுச் சொற்களே வடமொழிக்குத் தமிழ்மூல மென்பத்தைக்
காட்டிவிடும்;
அகரச்சுட்டு
(சேய்மை) |
இகரச்சுட்டு (அண்மை) |
தத் - அது
அதஸ் = அது, இது
அத்த = அதனால்
தத்ர: = அங்கு
தத்த: = அங்கிருந்து
தத்தா = அவ்வண்ணம்
ததா = அன்று |
இதம் = இது
இத்தி = இப்படி
இத்தம் = இவ்வண்ணம்
இக = இங்கு
ஏதத் = இது
ஏவம் = இப்படி
(இ - எ - ஏ) |
அத்ர (இங்கு), அதுனா (இன்று), அத்ய
(இன்றைக்கு) முதலிய சொற்கள் இகரமுதல்
அகரமுதலாகத் திரிந்துள்ளன.
"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்
- ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்."
|