பக்கம் எண் :

142செந்தமிழ்க் காஞ்சி

34 ம

34
மாதர் புலம்பல்

'மேலே மௌலா' என்ற மெட்டு

      பாதார விந்தமே பாவியின் சொந்தமே
      நாதா பணிந்தமே நம்பி யிருந்தமே
   நானிலத்தும் மேனிலத்தும் நாதனே நல்வேதனே
   ஈனரைப்போல் ஏனுனக்கே எல்லை யில்லா வேதனை
      என்னோ கொடுமையீ தெங்கணு முள்ளதோ
      முன்னோர் கனவிலும் முன்னின தில்லையே
 
   பாதகப் பகைவர்பல பந்தமாய்நிர்ப் பந்தமாய்க்
   கோதில்லா மெய்க்கோ வுனையுங் கொல்லமனம் வந்ததோ
      குற்றமில்லாமலே கொல்லவும் நீதமோ
      கொற்றவ னாணையும் கொல்லுவார் போதமோ
 
   ஆணிகை காலேறி ரத்தம் அருவியாய்ப் பாய்ந்தோடுதே
   மேனியெல்லாம் மாறித் தாகம் மிஞ்சிமுகம் வாடுதே
      ஐயோஇத் தொல்லையை ஆரிடஞ் சொல்லுவேன்
      மெய்யேஇப் புல்லரை மேதினி கொள்ளுமோ?
 
   வாரடிகள் வீங்கியந்தோ வரைவரையாய்த் தெரியுதே
   வாதையெங்ஙன் ஆற்றுவாயென் வயிறுபற்றி யெரியுதே
      வல்லோரைத் தெய்வமும் வருத்த வில்லையே
      பொல்லா விரோதிகள் புத்திர முள்ளதே
 
   தேகமெல்லாம் நோவு மீறித் தியங்கிநீ கலங்கவும்
   ஆகடிய மாய்ப்பலரும் அவதூறு முழங்கவும்
      தேவாஇவ் வேளையோர் திக்குமில் லாமலே
      ஆவாநீ போகமுன் அக்கர மானதோ
 
   பாவிகளுக் காகவேயிப் பாரில்பாடு பட்டவா
   காவகச் சிலுவைமீது கதறியாவி விட்டவா
      கல்லே யெனாதகம் கையறும் வேளையும்
      வல்லே யறாதினும் வைகுமென் ஆவியும்
 
   ஏசையா உன்இன் முகத்தை என்றுநான்கண் டாறுவேன்
   இன்னல்வாரி யின்நடுவில் எங்ஙன்கரை யேறுவேன்?