பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 141

33 ச

33
சிலுவையின் ஏழு வசனங்கள்

    இராகம் - காப்பி                     தாளம் - திஸ்ர ஏகம்

முகவுரை

  பாவிகட்காய்ப் பாரில் வந்தே பாடுபட்டுத் தேகநைந்து
  தேவமகன் சிலுவையுரை திவ்யமணி ஏழுமன்பு
  சேவைபலித் தேசுபெறச் சிந்தி நெஞ்சே
   
   1. எந்தையேநீர் இவர்களுக்கு மன்னித்திடும் தங்கள் செயல்
  இன்னதென்றே அறியாதிருக் கின்றனரென் றேசிரந்தார்
  முன்புரைத்த அன்புபொறை பண்புறவே
   
   2. என்னையுந்தன் அரசிலெண்ணும் என்றவலக் கள்வனுக்கே
  இன்றைக்கு நீ என்னுடனே பரதீசிருப் பாயென்றனர்
  எம்பெருமான் வீடளிக்கும் எத்தரர்க்கும்
   
   3. மாதேயதோ உன்றன்மகன் யோவானதோ உன்றா யென்றார்
  மாதாகடன் அன்புமிகும் மாணவனின் மைந்த நிலை
  போதரத்தம் தேவிகமும் புண்ணியனார்
   
   4. என்தேவனே என்தேவனே ஏனென்னைக் கைவிட்டீ ரென்றே
  ஏனைமொழி ஏலிஏலி லாமாசபக் தானி யென்றார்
  மானிடனாய்ப் பாடுபட்டே மாண்டதிறம்
   
   5. தேகமதால் நீரின்மேலும் தேவிகத்தாற் பாவிமேலும்
  தாகமாக இருக்கிறேன் நான்என்று சொன்னார் தம்பிரானும்
  பானமின்றிப் பாய்ந்திரத்தம் போன நிலை
   
   6. பாவம்பட நாகஞ்சாவு பாதளம் பேய்மீது வெற்றி
  சேவகமோ வேதனையோ சீவமீட்போ முடிந்ததென்றார்
  பாவபலி யானபெருந் தேவமறி
   
   7. எந்தையேஉம் கைகளிலென் ஆவியை ஒப்புவிக்கின்றேன்
  என்றுரக்கக் கூவியுடன் எம்பெருமான் மாய்ந்தனரே
  தந்தையொடு தாமொருவ ரென்றதகை.