New Page 2
முகவுரை
‘கிறித்தவக் கீர்த்தனம்’
என்னும் பெயர் தாங்கி மொழியியற் செல்வர் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களின்
பாக்கள் வெளியாகின்றன. மொழியிலேயே மூழ்கிக் கிடந்த பேரறிஞரவர்களுக்குப் பாவாணர் என்ற
சிறப்புப் பெயர் வழங்குவதேனோ என்று சிலருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஐயப்பாட்டினை இந்த நூல்
அகற்றிவிடுகிறது. கவிதையும் கட்டுரைப் பாங்கும் ஒருங்கே ஒரிவரிடத்தே அமைவது என்பது அரிதாகும்.
பாவாணரவர்களிடத்து இவையனைத்தும் காணப்பட்டன.
தேவநேயரவர்களின்
மொழியியல் ஆராய்ச்சிகளைப்பற்றி யான் இங்கு ஒருசிறிதும் கூறவில்லை. அது கடல்; பெருங் கடல்.
இங்கே இப்போது வெளியாகியுள்ள பாட்டு நூலைப்பற்றி மட்டுமே ஓரிரு கருத்துகளைச் சொல்லி மகிழ்வேன்.
இந்த நூல் அளவில் சிறிது; பொருளில் பெரிது; மிகப் பெரிது. இந்த நூலினை மேற்போக்காகப்
பார்த்தால்கூடப் பாவாணரின் இசையறிவும், அது பரந்து பரவிக் கொண்டிருந்த எல்லைகளின்
விரிவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவற்றைப் படைத்து வழங்கியிருக்கிற பாவாணர்
‘எப்படிப்பாடினரோ’ நாம் கேட்கவில்லை, என்பதோர் ஏக்கம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.
இந்த நூலில் உள்ள பாட்டுகள் அனைத்திற்குமே இராகம், தாளம், மெட்டு ஆகிய பல குறிப்புகள்
சேர்க்கப்பட்டிருக்கின்றன. பாட்டுகள் பலவற்றிற்குக் கருநாடக இசைவழியான பண்கள் இவை எனக்
குறிப்பிடப்பட்டுள்ளன. தியாகராசருடைய கீர்த்தன மெட்டுகளில் பாட்டுகள் பல அமைந்துள்ளன. தேவார
திருவாசக இசைநடைகளைப் பின்பற்றிய பாடல்களும் இந் நூலின்கண் உள்ளன. மெட்டுக் குறிப்பிடாமல்
இராகம் இன்னது தாளம் இன்னது என்ற குறிப்புகளை மட்டும் பெற்றிருக்கிற பாடல்களும் உள்ளன.
இவையல்லாமல், நாட்டுப்புற மக்கள் விரும்பிப் பாடுகின்ற தெம்மாங்க, சிந்து ஆகிய மெட்டுகளிலும்
பாடல்கள் அமைத்திருக்கின்றார். பாவாணரவர்களின் இளமைக் காலத்தில் நாடக மேடைகளில்
புகழ்மிக்க பாடல்களாகக் கருதப்பட்டிருக்கக் கூடிய "தசரத ராஜகுமாரா" முதலிய பாட்டுகளின் மெட்டுகளில்
இந்த நூல் பாடல்கள் அமைந்திருக்கின்றன. போதாக் குறைக்கு அக்காலத்தே பாமர மக்களால்
|