"வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல(து) இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி’’ (தொல். மர. 82) இவை ஆரிய வரணத் தொழில் வகுப்பொடு முரண்படுதல் காண்க. இனி, அரசன் என்பவன் அவ்வந் நிலத்து மக்கள் தலை வனேயன்றி அவரினின்றும் வேறுபட்ட தனி வகுப்பினனல்லன். ஆரியர் சத்திரியரோ ஒரு தனி வகுப்பார். தமிழ அந்தணர்க்கு உடம்பும் மிகை யென்றார் திருவள்ளுவர். ஆரியத் துறவியர்க்கோ பூணூலும் நீர்ச்செம்பும் முக்கவர்க் கோலும் இருப்பு மணையும் என்றும் உட னிருத்தல் வேண்டும். "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய." (தொல். மர. 71) இனி அவாவறுத்தலை இன்றியமையாத தலையாய துறவறமாகக் கூறினார் திருவள்ளுவர். ஆரியத் துறவியோ ஆவும் பொன்னும் அளவிறந்து பெறுதற்குரியவனாகின்றான். "ஆவொடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே" (இனியவை. 23) இனி, தமிழ்நாட்டு நால் வரணத்தாருள் ஏனை மூவரும் தூய தமிழராயிருக்க அந்தணன் மட்டும் பிராமணனா யிருப்பது வியக்கத்தக்கதே. பண்டைப் பேதை மூவேந்தரே இதற்குத் துணையாயிருந்தவர். இங்ஙனம் அரசரே துணையாயிருந் திருப்பின் எந்நாட்டிலும் இத்தகைய நிலைமையைத் தோற்று வித்திருக்கலாம். உலகில் முதன்முதல் தோன்றிய நாகரிக இனத்தான் தமிழன். அவன் மொழி தமிழ். தமிழ் திரிந்து திரவிடமும், திரவிடம் திரிந்து ஆரியமும் ஆனது போன்றே தமிழன் திரிந்து திரவிடனும், திரவிடன் திரிந்து ஆரியனும் ஆகி யிருக்கின்றான். ஆதலால் பாட்டன் இனத்தானான தமிழனுக்குப் பேரன் இனத்தான் ஆனவன் ஆரியன். இத் தொடர்பே யன்றித் தமிழனுக்கு ஆரியனொடு நேரடியான தொடர்பு ஒன்றுமில்லை. ஆதலால் ஆரிய வரணப் பகுப்புத் தமிழனைத் தழுவாது. தமிழ் எங்ஙனம் தனிப்பட்டதோ அங்ஙனமே |