நின்றவன் நெடுந்தொலைவு." மொழிபெயர்ப்பு நூல்களைக் கற்றபின் மேற்கொண்டு கற்கவும் நம்மிடம் நூலில்லை. கற்றுக்கொடுத்த சொல்லும் கட்டிக்கொடுத்த சோறும் நீடு பயன்படா. நாம் சப்பானியர்போற் பொறியாக்க வினை பயின்று தேர்ச்சி பெறினும், உலகச் செய்திகளறிதற்கும் உலகஞ் சுற்றற்கும் உலக மாநாடுகளிற் கலந்துகொள்ளற்கும் ஆங்கில அறிவு வேண்டி யுள்ளது. ஆங்கிலரும் செருமானியரும் இரசியரும் சப்பானியரும் அறிவியலை வளர்ப்பவரேனும், ஒன்றிய நாடுகளின் அமெரிக்கர் போல் திங்களை யடையும் நிலையில் இல்லை யென்பதை உணர்தல் வேண்டும். அமெரிக்கர் மொழி ஆங்கிலமே. இனி, ஆங்கிலவாயிற் கல்வியால் மாணவர்க்குள் இருகுல முண்டாகுமென்பது, எள்ளி நகையாடத் தக்கதே. எல்லாரும் உயர் குலத்திற் சேர இடமிருக்கும் போது, ஏன் ஒருசாரார் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்? தாழ்குலத்தார் உயர்குலத்தாராக உயர்வதா? உயர்குலத்தார் தாழ்குலத் தாராகத் தாழ்வதா? எது நன்று? உலக முழுதும் ஒரே நாடாகும் நிலைமை நெருங்கி வருகின்றது. உலகநாட்டாட்சியில் ஆங்கிலமே அரசியல் மொழியாயிருக்கும். இன்றும், வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்க்கு ஆங்கிலப் பேச்சாற்றல் இன்றியமையாததாயுள்ளது. "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு" (குறள். 397) என்று திருவள்ளுவர் பண்டு தமிழுக்குச் சொன்னது, இன்று ஆங்கிலத்திற்கே முற்றும் பொருந்தும். ஒருவர் இன்று திருவள்ளுவருங் கம்பரும் போற் பெரும் புலவராயிருப்பினும், ஆங்கிலப் பட்டமின்றிக் கல்லூரிக்குட் கால்வைக்க முடியாது. ஒருவர் எத்துணை ஆழ்ந்து பரந்தா ராய்ந்து அரியவுண்மைகளைக் கண்டிருப்பினும், ஆங்கில அறிவின்றேல் ஊமையன் கண்ட கனாவே. நான் திருச்சிராப்பள்ளிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியனாயிருந்தபோது, மறை மலையடிகள் தங்கள் தமிழர் மதம் என்னும் நூலின் அன்பளிப்புப் படியொன்றனுப்பி, அதுபற்றிய என் ஆங்கில |