பக்கம் எண் :

4மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

   குடியென்னுஞ்   சொல்   முதற்காலத்தில்   வீட்டையே   குறித்தது.    குடியிருத்தல் = வீட்டில் வதிதல். குடிக்கூலி = வீட்டு வாடகை. மனைவி பெரும்பாலும்  வீட்டிலிருந்து  சமையல் செய்து பிள்ளைகளைப் பேணுவதால், குடியென்னுஞ் சொல் இடவாகு பெயராய் மனைவியையுங் குறித்தது. அவனுக்கு இருகுடி, மூத்த குடி(யாள்), இளைய குடி(யாள்), என்னும் வழக்கைக் காண்க. ஒ.நோ: மனை = வீடு, மனைவி; இல் = வீடு, மனைவி.

  பல வீடுகள் சேர்ந்து ஓர் ஊராவதால், குடி என்னுஞ் சொல் சினையாகுபெயராக  ஊரையுங்  குறித்தது,  சில  வீடுகள்  சேர்ந்த சிற்றூர் சிறுகுடி யெனப்பட்டது.


"சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
 தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே"
(சிலப். 24:9 கண்ணகிவழி.)


செங்காட்டங்குடி, காரைக்குடி, மன்னார்குடி, தூத்துக்குடி என்பன, அடைசொல் கொண்ட  ஊர்ப்பெயர்கள். சிறுகுடி  மக்கட்டொகையாற்  பெருத்த பின், ஒரு அல்லது பல குடும்பம் பிரிந்துபோய் வேறு புதுக்குடியை அல்லது குடிகளைத் தோற்றுவித்தன. முன்பு சிறுகுடியாயிருந்தது பின்பு பெருங்குடியாகி இறுதியில் முதுகுடியுமாயிற்று. முதற்கண் ஒரு வீடாகத் தோன்றியதே, பின்னர்ப் பல வீடுகளாகப் பல்கி ஓர் ஊராகு மென்பதை, நெல்லை மாவட்டச் சங்கரநயினார் கோவிலின்  தென்கிழக்கில்  இருகல்  தொலைவில்,  இந் நூற்றாண்டுத்  தொடக்கத்தில் ஒரே வீடாகத் தோன்றி ஒற்றையூர் எனப்பட்டது,  இன்று பல வீடாகப் பெருகியிருப்பதால்அறியலாம்.

  குடியென்னுஞ்  சொல், நாளடைவில், முறையே  வீட்டு வாழ்வையும், வீட்டு  வாழ்நனையும்,   அவன்    குடும்பத்தையும்,    அதன்   பெருக்கமான  கூட்டுக்குடும்பத்தையும்,  அதன்  விரிவான  இனத்தையும்,  அதன் மரபுத் தொடர்ச்சியான வகுப்பையும் அல்லது குலத்தையும், ஊர்மக்களையும், நாட்டு மக்களையும் குறிக்கலாயிற்று.

  குடி=1. வீட்டுவாழ்வு. எ-டு: குடிகொள்ளுதல். 2.நிலை யான வீட்டுவாழ்வு.    குடியானவன்  =  நிலையான  வீட்டுவாழ்வு  கொண்ட  உழவன்.  3. வீட்டு வாழ்நன்,   நாட்டு வாழ்நன். குடி (ஒருமை). குடிகள் (பன்மை). 4. குடும்பம். குடித்தனம் = குடும்ப வாழ்க்கை, குடும்பத்தை நடாத்துதல். 5.  ஊர்மக்கள்.  குடிமகன் =