பக்கம் எண் :

முன்னுரை5

ஊர்த் தொண்டனான அடுத்தோன் (முடிதிருத்தாளன்). 6. கூட்டுக் குடும்பம், இனம். "ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்" (புறம். 183). 7. குலம். நாட்டினம். குடிசெயல்வகை   (குறள். அதி. 103). 8. நாட்டு மக்கள். மன்னவன் கோனோக்கி வாழுங் குடி.(குறள். 542). 9.மரபுவழி. பாண்டியர் குடி.
 
   குடி - குடும்பு - குடும்பம். ஒ.நோ: குழி - குழும்பு. குடும்பு என்னுஞ் சொல் உத்தரமேரூர்க்   கல்வெட்டில்   ஊர்ப்  பிரிவைக்  
(ward)    குறித்தது.   குடும்பம்- குடும்பன். பள்ளர் என்னும் மள்ளர்குல ஊர்த்தலைவன் குடும்பன் எனப்படுவான்.
 
  ஐந்திணைக் குடியிருப்புத் தலைவர்
 
  
 முதற்காலத்தில்  மக்கள்  மரமடர்ந்த  மலைநாட்டிலேயே  பெரும்பாலும்  இயற்கை விளைவையும் சிறுபான்மை செயற்கை விளைவையும் உண்டு வாழ்ந்து வந்தனர். இயற்கை விளைவில், வேட்டையூனும் ஆடுமாடெருமை யென்னும் முந்நிரைப் பாலும் அடங்கும்.
 
   வானாவாரிப் பயிருக்கேற்ற நிலமும், முந்நிரைக்கு வேண்டிய புல்வெளியும் போதாமையால்,  மலைவாணருள்  ஒரு  சாரார்  மலை  நாட்டையடுத்த  திறந்தவெளிக் காட்டுநிலத்திற்கு வந்து வாழ்ந்தனர்.
 
   நெல்லும் வாழையும் போன்ற சிறந்த பயிர்கட்கேற்ற நிலவளமும் நீர்வளமும் முல்லையென்னுங்  காட்டுநிலத்தி  லின்மையால்,  அங்கிருந்து  ஒரு  சாரார்  அடுத்திருந்த இருவள மருதநிலத்திற்குத் தாவினர். உணவிற் கின்றியமையாத உப்பு விளைக்கவும், கடல்மீன் பிடிக்கவும், அணிகலத்திற்கு வேண்டிய முத்துப் பவளமெடுக்கவும், மருதநிலத்தினின்று ஒரு சாரார் கடற்கரைக்குச் சென்று வதிந்தனர்.
  
   இந் நால்நிலமும் நிலையான இயற்கை நிலம். இவை அவற்றிற் சிறப்பாகப் பூக்கும் பூப்பற்றி, முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெயர்பெற்றன.   மக்கள் மலையினின்று கடல்நோக்கி ஆற்றையொட்டி நேராக வருங்கால், இந் நால்நிலமும் முறையே அமைந்திருப்பது, தமிழ்நாட்டிற்கே சிறந்த அமைப்பாகும்.
 
   ஆண்டுதோறும்  கடுங்கோடைக்  காலத்தில்,  முல்லை  குறிஞ்சி நிலங்கள் நீர்வற்றி வறண்டு பாலுள்ள மரஞ்செடி