பக்கம் எண் :

40மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

"ஈகை யரிய யிழையணி மகளிரொடு
 சாயின் றென்ப ஆஅய் கோயில்
 சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
 பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
 யுரைசா லோங்குபுகழ் ஒரீஇய
 முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே."
(புறம். 127)

"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
 விற்றுக்கோள் தக்க துடைத்து."
(குறள். 220)

  இந் நூற்றாண்டிலும், தம் செல்வம் முழுவதையும் இரப்போர்க்கீந்த செண்டத்தூர் வள்ளல் ஐயாத்துரை முதலியாரும், கல்விக்கீந்த காரைக்குடி வள்ளல் அழகப்பச் செட்டியாரும் இருந்தனர்.


3. மதத்தில் தலையிடாதது

  மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை யென்றும், கூட்டுடைமைக் கொள்கைக்கு முரணானதென்றும், தவறான கருத்து இருந்துவருகின்றது. அதற்கு மாறாக, மதமே மக்கள் பண்பாட்டிற்கு அடிப்படையான தென்பதையும், கூட்டுடைமைக்கு ஏதுவான தென்பதையும் பலர் அறிந்திலர்.


"அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
 அவாவுண்டேல் உண்டாம் சிறிது."
(குறள். 1075)

  ஒரு நாட்டில் அல்லது ஊரில் கொலை களவு கொள்ளை கற்பழிப்பு முதலியன பெரும்பாலும் இல்லாதிருத்தற்கு, அரசன் அல்லது அரசு தண்டிக்கும் என்னும் அச்சமேயன்றி வேறொன் றும் கரணியமன்று. அங்ஙனமே, பலர் தீயொழுக்கத்தை விட்டு நல்லொழுக்கத்தை மேற்கொண்டிருத்தற்கும், மறுமையில் இறைவன் எரிநரகிலிட்டுத் தண்டிப்பான் என்னும் அச்சமே கரணியமாகும். பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது. ஆதலால், மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையே யாகும்.

  இறைவன் எல்லா வுயிர்கட்கும் தந்தை யென்பதும், அறவாழி யந்தணன் என்பதும் மதத்தின் அடிப்படைக் கொள்கை. அறிவும் அன்பும் நிரம்பாத உலகத் தந்தைக்கும் தன் மக்கள் எல்லாரும் வயிறாரவுண்டு வாழவேண்டுமென்பதே பெரு விருப்பம். அங்ஙனமாயின், முற்றறிவனும் அன்பே வடிவானவனுமான பரமதந்தைக்கு மக்களெல்லாரும் கவலை