|
New Page 1
மொழியாராய்ச்சியால் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கவும்,
அது கட்டுக் கதையென்று கூறிவரும் வையாபுரிகளும் ஆராய்ச்சியிலிகளும்,
"உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்"
(குறள்.
850)
என்னும் குறட்கே சிறந்த இலக்கியமாவர். மேலும், பல்கலைத்
தெளிவும் நடுநிலை பிறழா வாய்மையுங் கொண்ட தலைசிறந்த உரையாசிரியருள் ஒருவரான அடியார்க்குநல்லார்,
தம் சிலப்பதிகார வேனிற் காதை யுரைத் தொடக்கத்தில், "அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி
முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு
மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும்,
ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய
பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால்,
குமரியாகிய பௌவ மென்றார் என்றுணர்க." என்று தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டிருந்த பழம்
பாண்டி நாட்டைப் பல்வேறு சிறு நாடுகளாகப் பகுத்துக் கூறியிருப்பது, பழைய ஏட்டினின்று பெயர்த்தெழுதிய
மரபுவழி வரலாற்றுச் செய்தியாகவன்றி, புதுவது புனைந்ததாகவோ சேரநாட்டுப் பஃறுளியாற்றைப்
பிறழவுணர்ந்த தாகவோ இருக்க முடியாதென்று கூறிவிடுக்க.
2. மென்மை
தமிழர் மாந்தன் வரலாற்றிற் குழந்தைபோல் முந்தித் தோன்றிய
இனத்தவராதலால், அவர் வாயில் குழந்தைகளும் முதியவரும் களைத்த வரும் நோயாளிகளும்கூட எளிதாய்
ஒலிக்கத் தக்கனவும், பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொதுவானவுமான (உயிர் பன்னிரண்டும் மெய்
பதினெட்டுமாக) முப்பது எழுத்தொலிகளே பிறந்திருந்தன. அதோடு, தனி மெய்யொலியில் தொடங்கும்
சொற்களும், வல்லின மெய்யொலியில் இறுஞ் சொற்களும், சில மெய்யொலிகட்குப் பின் சில மெய்யொலிகள்
தமித்தோ உயிர்மெய்யாகவோ இடையில் வருஞ் சொற்களும், அவர் வாயில் வந்ததில்லை. இலக்கியங்
கண்டதற் கிலக்கண மியம்பல் என்னும் முறையில், அக்காலத்து வரையறுக்கப்பட்ட முதலிடை கடை யெழுத்து
வரம்புகளே, இக்காலத் திலக்கண நூல்களும் ஏற்றுக் கூறுகின்றன. தமிழினின்றே திரிந்த திரவிடம்
உட்படப் பிறமொழிகளில் இத்தகைய வரம்பீடில்லை அதனால்,
“எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர்ப் பெனப்பன் னிருபாற் றதுவே’’
(57)
|