பக்கம் எண் :

104தமிழர் மதம்

    மகேந்திரமலை தெற்கே மூழ்கிப் போன குமரிமலைத் தொட ரின் வடபகுதி யென்பது,

     "துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின்  
      அங்கனக இலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்" (கோபுர. 68)

என்னும் சிவ தருமோத்திர அடிகளால் அறியப்படும். "மிகவும் உயர்ந்திருக்கிற பொதிய மலைக்குத் தெற்காகிய மயேந்திர கிரியின் அடிவாரத்தில், அழகிய பொன்மயமாகிய இலங்கை யென்னுந் தேசமும் பொருந்தும்" என்னும் அவ் வடிகளின் உரையை நோக்குக.

    கி.பி. 2ஆம் நுற்றாண்டிடை வரை இருந்ததாகத் தெரிகின்ற குமரியாறு, மகேந்திரம் என வடவர் வழங்கும் குமரிமலைப் பகுதியி னின்றே எழுந்தோடி, இலங்கைத் தீவு பிரியாது பெருநிலத்தோடு சேர்ந்திருந்த காலத்தில், அதனூடு பாய்ந்து கடலிற் கலந்திருத்தல் வேண்டும்.

    குமரியாற்றின் ஒரு பகுதி ஓடிக்கொண்டிருந்த காலத்திலேயே ஆரியர் ஒருசிலர் தென்னாட்டிற்கு வந்துவிட்டாரேனும், மகேந்திரம் என்னும் குமரிமலையிற் சிவபெருமானிடம் அல்லது அவரருள் பெற்ற நந்திபோன்ற குரவனிடம், கொள்கை மறையும் தொழுகை மறையும் பற்றிப் பாடங் கேட்டவர் தனித்தமிழ்ப் பெயர் தாங்கிய தமிழராகவே யிருந்திருத்தல் வேண்டும்.

    இன்றுள்ள வடமொழிச் சிவாகமங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண் டிற்குப் பின்னரே தோன்றின. அவற்றுள் மூலமானவை தொண்டு (ஒன்பது) என்பதும், ஏனைப் பதின்றொண்டும்(பத்தொன்பதும்) அவற்றின்வழிப் பின்னர்த் தோன்றின என்பதும்,

     "பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்  
      உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்  
      மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம்  
      துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே" (73)
   
     "ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு  
      மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்  
      வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்  
      றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே" (74)

என்னுந் திருமந்திரங்களான் அறியப்படும்.

    முப்பேதம் - மூவேறுபாடு. அவை கருமக் காண்டம், வழி பாட்டுக் காண்டம், அறிவக் காண்டம் என்பன.

    சிவனியம் ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே குமரி நாட்டில் தோன்றிய மதமாதலால், குமரிமலைத் தொடரின் வடமுடி