பக்கம் எண் :

தமிழர் மதம் 127

இச

    இச் சொற்கட் கெல்லாம் வேரும் மூலமும் தமிழிலேயே உள்ளன. வடமொழி தேவமொழியாதலாற் கடன் கொள்ளா தென்னும் ஏமாற்றும், வடமொழித் தென்சொற்கட்குப் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் வேறு மூலங்காட்டுவதும், இக்காலத்திற்கு ஏற்கா.

    தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை நாட்டற்கு 'தா' என்னும் சொல் ஒன்றே போதிய சான்றாம். தா - ச. தா, தத் (dad), இலத். தோ, கிரேக், திதோ.

    இச்சொல் தமிழில் தொன்றுதொட்டுப் பெருவழக்காயிருந்து வருவதுடன்,
 

    "ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
     இரவின் கிளவி ஆகியட னுடைய."
(தொல். எச். 48)
    "அவற்றுள்,
     ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே."
(தொல். எச். 49)
    "தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே."
(தொல். எச். 50)
     "கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே."
(தொல். எச். 51)
    "தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
      தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த."
(தொல். கிளவி. 29)

    என்னும் வரம்புகட் குட்பட்ட சிறப்புப் பொருளதாயும், தா என்னும் தந்தை பெயராயும் உள்ளது. கன்னடத்திலும் மலையாளத்திலும் போன்றே ஆரியத்திலும் பொதுப் பொருளில் வழங்குவதால், அவ்வாரிய மொழிகள் தமிழினின்று இச் சொல்லைக் கடன் கொண்டுள்ளன என்பது, தெரிதரு தேற்றமாம்.

    ஒரே தென்சொல் முதனிலையினின்று திரிந்த திரிசொற்கள், சமற்கிருதத்தில் வெவ்வேறு முதலெழுத்துப் பெற்று வெவ்வேறு மூலத்தினபோல் தோன்றுகின்றன.

    எ-டு : சாய் (முதனிலை). சாய்தல் = பேணுதல், வளைதல்,விழுதல், படுத்தல், இறத்தல்

    சாயுங் காலம் = பொழுது சாயும் ஏற்பாடு. பொழுது சாய வந்தான் என்னும் வழக்கை நோக்குக.

    சாயுங் காலம் - சாயங் காலம் - சாய்ங்காலம் (கொச்சைத் திரிபு).

    வடமொழியாளர் சாயங்காலம் என்பதைச் சாயம் + காலம் எனத் தவறாகப் பிரித்து, சாயம் என்பதை ஏற்பாட்டின் பெயராகக் கொண்டு, அதை வடமொழியில் ஸாயம் என்று குறித்துள்ளனர்.