பக்கம் எண் :

130தமிழர் மதம்

விடவில்லை. பணிலம் என்னும் சொல் வடமொழி அகரமுதலி களில் இல்லை. தென்சொல்லை வடசொல்லாகக் காட்டுவதில் தலைசிறந்த சென்னைப் ப.க.க. தமிழ் அகரமுதலியும், அச் சொல்லை வடசொல்லாகக் குறிக்கவில்லை. அங்ஙனமிருந்தும், சாமிநாதையர் எங்ஙனம் வடசொல்லாகக் கண்டாரென்று தெரிய வில்லை. அவர் தமிழுக்கு மாபெருந் தொண்டு செய்தார் என்பது உண்மையே. ஆயின், அவர் முன்னோரான பிராமணர் தமிழுக்கு மாறாகச் செய்த வழுவாயின் ஆயிரத்திலொரு கூற்றிற்குக் கூட, அது கழுவாயாக வில்லையென்பதை அறிதல் வேண்டும்.

    அவி - அவிழ் = சோற்றுப் பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து -அமிழ்து - அமிது - அமுது = சோறு, உணவு. பருப்பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது என்பன உண்ணுங் கறிவகைகளைக் குறிக்கும் கல்வெட்டுச் சொற்கள்.

    அமுது செய்தல் = உண்ணுதல். அமுது படைத்தல் = உணவு பரிமாறுதல். திருவமுது = தெய்வப் படிமைக்குப் படைக்கப்படும் உணவு.

    அமிழ்து - அமிழ்தம். அமுது -அமுதம்.

    கட்டிப் பொருளாயினும், நீர்ப் பொருளாயினும், உண்ணப் படுவதெல்லாம் அமுதமாம். உணவிற்குச் சுவையூட்டும் உப்பும் அமுதம் எனப்பட்டது.

    அமுது - 1. சோறு. 2. உணவு. "வாடா மலரும் நல்லமுதும்" (ஞானவா. பிரகலா. 8). 3. பால் (அக. நி.) 4. நீர். (பிங்.).

    அமுதம் = 1. சோறு (பிங்.) 2. பால் (பிங்.) 3. நீர்

    "துலங்கிய வமுதம்" (கல்லா. 5).

    உண்டவன் வாழ்வான்; உண்ணாதவன் சாவான். சோறும் நீரும் சாவைத் தவிர்ப்பதால் இருமருந் தெனப்படும்.

    தயிர் அமுதம் எனப்படுவதால் வெண்ணெயும் அமுதமாம்.

    தேவர் மக்களினும் உயர்ந்தவராதலால், அவருணவு சிறந்த தாகக் கருதப்பட்டது.

      "ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது  
       வானோ ரமுதம் புரையுமால் எமக்கென"  (தொல். கற். 5)

    அமுதம் என்னுஞ் சொல் வடமொழியில் அம்ருத என்று திரியும்.  அதை அ + ம்ருத் என்று பிரித்துச் சாவைத் தவிர்ப்பது என்று பொருள் கொண்டு, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் கூடித்