ய
யில்லை. அதனால், பால் நெய் முதலியன
பாழாவதும் அரசிறையான பொதுப்பணச் செலவும் ஏற்படா.
உருவ வழிபாட்டை விரும்பியவரும்,
தனிப்பட்டவராகவோ பலர் கூடியோ, வீண் செலவு செய்யாது வழிபட்டு, விடுமுறை நாளிலும் வேலையில்லா
நாளிலும் தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு விழாக் கொண்டாடி, பிறரைப் பகைக்காதிருப்பின்,
அதனாலுங் கேடில்லை. ஆகவே, இவ் விருவகையாலும், மதத்தால் மக்கள் முன்னேற்றத்திற்குத் தடையில்லை
யென்பது பெறப் படுகின்றது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்,
மக்கள் முன்னேற்றத் திற்கு முட்டுக்கட்டையாயிருப்பது, ஆரியத்தா லேற்பட்ட பிறவிக் குலப்
பிரிவினையேயன்றி வேறன்று. இது இந்தியாவிற்கே சிறப்பான குமு காயக் கொடுநோய். பிராமணன்
தன்னை நிலத்தேவனென்றும் தன் இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும் சொல்லி ஏமாற்றி, மதத்
துறையுட் புகுந்து, கோவில் வழிபாட்டையும், இருவகைச் சடங்கு நடாத்தத்தையும் தன் குலத்தொழிலாகக்
கொண்டதனா லேயே, மக்களுடன் மதமுங் கெட்டதன்றிக் கடவுள் நம்பிக்கையா லன்று. இந் நிலைமை
என்றும் நிலைத்தற்பொருட்டே, தமிழருள் துப்புரவில் உயர்ந்தவன் வீட்டிலும் தான் தண்ணீருங்
குடிப்ப தில்லை யென்று தன்னை எல்லார்க்கும் மேலாகவுயர்த்தியும், தமிழர்க்கு ஒற்றுமையும் உரமும்
ஒருமித்த முன்னேற்றமும் ஏற்படா வாறு, அவரை நூற்றுக்கணக்கான ஏற்றத்தாழ்வுள்ள பிறவிக் குலக்கூண்டுகளுள்
அடைத்தும், வைத்திருக்கின்றான் பிராமணன். ஆகவே தமிழரை முன்னேற்றுதற்கு, பிராமணியத்தை மதத்தினின்று
முற்றிலும் பிரிப்பதே அறிஞர் மேற்கொள்ளத்தக்க செய்தியாம். மதத் துறையிலுள்ள குற்றங் குறைகளை
நீக்காது மதத்தையே ஒழிக்க வேண்டு மென்பது, சோற்றிலுள்ள கற்களைப் பொறுக்காது சோற்றையே
கொட்டிவிடுவது போன்றதே. சோறு முழுவதையும் கல்லென்றோ மணலென்றோ ஒருவன் கருதுவா னாயின், அது
அவன் புறக்கண்ணின் அல்லது அகக்கண்ணின் கோளாறே யாகும்.
மதத்திற் குற்றங் களைவது எளிதன்று;
எல்லார்க்கும் இயல்வது மன்று. பரந்த கல்வியும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் பண்பாடும் பொறுமையும்
உள்ளவரே, மதத்தைச் சீர்திருத்த முடியும். மூவாயிரம் ஆண்டாக ஈண்டியுள்ள அழுக்குக் குன்றை ஒரே
தலை முறையில் அகற்றிவிட முடியாது.
இன்றும் தமிழருட்
பெரும்பாலார் கடவுள் நம்பிக்கையுள்ள வராதலால், கடவுளில்லை யென்று சொல்லச் சொல்ல, அது ஆரிய
மேம்பாட்டிற்கும் ஏமாற்றிற்கும் அரண் செய்ததேயாகின்றது.
|