பக்கம் எண் :

156தமிழர் மதம்

ஆர

    ஆரியம் என்ற பேரு மில்லாத குமரிநாட்டிலும், கடவுள் நம்பிக்கையில்லாதவர் சிலரிருந்தனர். பிராமண வகுப்பில்லாத பிற நாடுகளிலும், கடவுள் நம்பிக்கையில்லாத பலரிருக்கின்றனர். இது பிறவிக் குணங்களுள் ஒன்று.

    கடவுளும் மறுமையும் இல்லை யென்று கூறும் உலகியம் (லோகாயத) என்னும் மதம், கடைக்கழகக் காலத்தில் தமிழகத்தி லிருந்தமை, "பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்" என்னும் மணிமேகலையடியால் (27 : 78) அறியப்படும். இம் மதவியலை நூலாக விரித்துரைத்தவன் சார்வாகன் (Carvaka).

     "அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்  
      அவாவுண்டேல் உண்டாம் சிறிது" (குறள். 1075)

என்பது உண்மையாதலால், ஓரளவு நல்லொழுக்கத்திற்குத் தூண்டு கோலாக இருக்கும் வகையிலேனும், மதத்தால் நன்மையுண்டென்று கருதி, மதத்தின் பெயரால் உண்மையில் தீங்கு செய்யும் பிறவிக்குலப் பிரிவினையையே, அறவே ஒழித்தல் வேண்டும்.

8. கடவுள் உண்டா?

    கடவுள் உண்டென்பாரும் இல்லை யென்பாரும், தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றனர். உண்டென்பாரே இன்றும் பெரும்பாலரேனும், இல்லை யென்பார் தொகை வரவர வளர்ந்து வருகின்றது.

கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்

    (1) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம், இடை யறாது
ஓர் ஒழுங்காக இயங்கிவருகின்றன.
   
  ஓர் ஊரில் ஊர்காவலோ அரசியலாட்சியோ சிறிது நேரம்
இல்லாவிடினும், கலகமுங் கொள்ளையும் கொலையும் நேர்
கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவையாட்டுப்  போல்
ஒழுங்காக ஆடிவரின், அவற்றை ஆட்டும் ஓர்  ஆற்றல்
இருத்தல் வேண்டும்.அவ்வாற்றல்அறிவற்றாயிருக்க முடியாது.
அவ்வறிவே இறைவன்.
   
    (2) இவ் வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள்
இரா விளக்காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி
வருகின்றன.
   
  ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே.
மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி