பக்கம் எண் :

158தமிழர் மதம்

கட

கடவுள் இல்லை யென்பதற்குக் காட்டப்படும் சான்றுகள்

    (1) உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள்  உள்ளாரும் இல்லாரும் படைக்கப்பட்டிருத்தல்.
   
    (2) பஞ்சம், கொள்ளைநோய், பெருவெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.
   
    (3) கடவுள் புறக்கண்ணிற்குப் புலனாவதில்லை.
   
    (4) ஒன்றோடொன்று முரண்பட்ட பல்வேறு மதங்கள் உலகில் வழங்கி வருகின்றன.
   
    (5) நல்லோர் பலர், வறுமை, நோய், பிறரால் துன்பம் முதலியவற்றால் வருந்திக் குறுவாழ்க்கையராய்ச் சாக, தீயோர் பலர் எல்லா வகையிலும் இன்புற்று நீடு வாழ்கின்றனர்.
   
    (6) பல அஃறிணை உயிரினங்கள் பிறவற்றைக் கொன்று தின்பனவாகவே படைக்கப்பட்டுள்ளன.
   
    (7) சிலர் எத்துணை உருக்கமாய் இறைவனை வேண்டினும், தாம் விரும்பியதைப் பெறுவதில்லை.

    இங்ஙனம், கடவுள் உண்டென்பதற்கும் இல்லையென்பதற் கும் காட்டப்படும் சான்றுகளுள் உண்டென்பதற் குரியவையே மிகுந்தும் வலிமையுள்ளனவாகவும் இருக்கின்றன. காட்சியளவை போன்றே கருத்தளவையும் உண்மை யறிவும் வழியாகும்.

    கடவுள் எங்கும் நிறைந்து ஆவி வடிவி லிருப்பதால், அவரை ஒருவனும் புறக்கண்ணாற் காண முடியாது. முரண்பட்ட மதங்கள் மாந்தர் படைப்பு. நல்லோர்க்கு மறுமையில் நல்வாழ்விருக்கலாம். பல் பிறவி நம்பிக்கையாளர் நல்லோர் துன்பத்தைப் பழவினைப் பயன் என்பர்.

    மாந்தன் மதியாற்றல் மட்டிட்ட தாதலின், இறைவன் ஆட்சியி லுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது.

     "ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடலில்  
      நாழி முகவாது நானாழி." (மூதுரை. 19)

    நல்லோர்க்கு நேரும் தீங்குகட்கு, அவர் பழம்பிறப்பிற் செய்த தீவினைகளைக் கரணியமாகக் காட்டுவர் கொண்முடிபாளர்.

    எங்ஙன மிருப்பினும், இரு சாராரும் தத்தம் கொள்கையை எதிர்க் கொள்கையார் நம்புமாறு நாட்டமுடியா திருப்பதால், கருத்து வேறுபாட்டிற் கிடந்தந்து, ஒரு சாராரை யொரு சாரார் பழிக்காதும் பகைக்காது மிருப்பதே உண்மையான பகுத்தறிவாம்.