பக்கம் எண் :

தமிழர் மதம் 17

New Page 1

(3) நாற்பூதம்

    நிலம் : நிலம் மக்களைத் தாங்குவதனாலும், உணவு விளையும் இடமாயிருப்பதனாலும், இறுதியில் எல்லா வுடம்பும் அதற்குள் ஒடுங்குவதனாலும், தாயாகக் கருதப்பட்டது.

      "நிலமக ளழுத காஞ்சியும்" (புறம். 365)

    நீர் : உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளை விப்பதாயும், தானும் குடிக்கப்படுவதாயும், உடம்பையும் பொருள் களையும் துப்புரவு செய்வதாயும், சமைக்கவுதவு வதாயும், உள்ள நீர்நிலை, எங்குங் காணப்படாமையால். ஆண்டு முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் பேராறுகள் தெய்வமாக வணங்கப்பட்டன.

    குமரிமலையும் பஃறுளியாறும் கடலுள் மூழ்கினபின், கங்கையே நாவலந்தேயத் தலைமைப் பேராறானமையின், அது ஒரு தாயாக அல்லது பெண்தெய்வமாக வணங்கப்பட்டது. கங்கை யம்மன் என்பது  இன்றும் ஒரு சிற்றூர்த் தெய்வம்.  ஆற்றுநீரை மிகுதியாகப் பயன்படுத்துபவர் வேளாளராதலின், அவர் கங்கை புதல்வர் எனப்பட்டனர்.  அவர் குலம் கங்கை குலம் எனப்பட்டது.

    கங்கை நாடு ஆரியநாடாக மாறியபின், வேளாளர் காவிரிப் புதல்வர் எனப்பட்டனர்.

       "பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்"  (சிலப். 10 : 148)

     தீ : தீ பல்வகையிற் பெருநன்மை செய்வதுபற்றித் தலைசிறந்த தெய்வமாக வணங்கப்பட்டதனால், தெய்வம் என்னும் பெயரே தீயைக் குறிக்குஞ் சொல்லினின்றே தோன்றிற்று.

    மரங்களும் கற்களும் பிறவும் ஒன்றோடொன்று உரசுவதனால் தீப் பிறப்பதைக் கண்டனர். அதனால், ஞெலிகோல் என்னும் தீக்கடைக் கோலால் தீயுண்டாக்கும் வழியைக் கண்டு பிடித்தனர். பொருள்களின் உராய்வினால் தீத் தோன்றலைக் கண்டபின், உராய்தலைக் குறிக்கும் தேய் என்னும் வினையினின்று, தீ என்னும் பெயரும் தெய்வம் என்னும் பெயரும் தோற்றுவிக்கப் பட்டன.

      தேய்தல் = பொருள்கள் ஒன்றோடொன்று உராய்தல்.
   
      தேய் - தேயு = உராய்ந்து பற்றும் நெருப்பு.
   
      தேயு - தேசு = நெருப்பின் ஒளி, ஒண்மை.
   
      தேசு - வ. தேஜஸ்.

    தேய் - தே = 1. தெய்வம் (பிங்.). "தேபூசை செய்யும் சித்திரசாலை" (சிவரக. நைமிச. 20 ). 2. நாயகன் (இலக். அக.).