பக்கம் எண் :

24தமிழர் மதம்

New Page 1
     "செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
      செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
      ................செச்சைக் கண்ணியன்"
(திருமுருகு.  206 - 8)
     "பவழத் தன்ன மேனித் திகழொளிக்
      குன்றி யேய்க்கு முடுக்கை..........
      சேவலங் கொடியோன்................"
(குறுந். கடவுள்.)
     "உடையு மொலியலுஞ் செய்யைமற் றாங்கே
      படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்
      உருவு முருவத்தீ யொத்தி முகனும்
      விரிகதிர் முற்றா விரிசுட ரொத்தி"
(பரிபா. 19 : 97-100)

    வேட்டைத் தொழிலாற் குறவர் மறஞ் சிறந்திருந்ததனால், தம் தெய்வத்தையும் மறவனாகக் கருதி, அதற்கேற்றவாறு அவனை முருகன் (இளைஞன்) என்றனர்.

    முள் - முளை - முளையன் = சிறுவன். முள் - முர் - முரு - முருகு =  இளமை (திவா.),  அழகு (பிங்.). இளமையிலேயே அழகிருப்பதால், அழகு என்பது வழிப்பொருளே. முருகு - முருகன் = கட்டிளமை யோன் (திவா.), முருகத் தெய்வம். முருகன் என்னும் பெயர், இலக்கிய வழக்கில் ஆண்பாலீறு குன்றியும் வரும்.

      "அருங்கடி வேலன் முருகொடு வளைஇ" (மதுரைக். 611)

    குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்னும் பொருளதே. குறிஞ்சிநிலக் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என் றும், வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும், முருக னுக்குப் பெயர்கள் தோன்றின. முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தினதனால், அவனுக்குக் கந்தன் என்னும் பெயரும் தோன்றிற்று. கந்து = தூண். கந்தம் = தூணம் (பெருந்தூண்).

      "கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்  
       பலிகண் மாறிய பாழ்படு பொதியில்" (புறம். 52)

என்று புறப்பாடல்  கூறுதல் காண்க. கற்றூண்களில் தெய்வவுருவம் பொறிப்பதை, 'கந்திற் பாவை' என்னும் மணிமேகலைச் சொல் லாலும் (21 ) அறிக.

    கந்து - கந்தம் - கந்தன்.

    குறிஞ்சிநிலப் பறவையாகிய மயிலை முருக னூர்தியாகக் கொண்டமையால், மயிலூர்தி, மயிலேறும் பெருமாள் என்னும் இலக்கிய வழக்கும் எழுந்தன. போர்மறஞ் சிறந்த சேவல் அவனுக்குக் கொடியாயிற்று.