New Page 1
குறிஞ்சிநிலத் தலைவி கொடிச்சியெனப்பட்டதனால்,
அதற் கேற்ப, முருகன் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள்.
தேனும் தினைமாவும் கள்ளும் இறைச்சியும்,
முருகனுக்குத் தொண்டகப் பறையறைந்து படைக்கப்பட்டன. முருகத்தெய்வ மேறி யாடுபவன், வேலேந்தியதனால்
வேலன் எனப்பட்டான். அவன் கள்ளுண்டாடிய ஆட்டு வெறியாட்டு எனப்பட்டது. முருகன் கோவில்கட்குக்
காவடி யெடுத்தல், அவனடியார்க்கே சிறப்பாக வுரிய நேர்த்திக் கடன்.
முல்லைத் தெய்வம்
முல்லைநிலத்தில், ஆடுமாடுகட்குப்
புல் வளரவும், ஆயருண விற்கு வானாவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டிய தாயிற்று. மழை கரிய
முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்று பெயரிட்டு வணங்கினர்.
"இன்னிசை யெழிலியை யிரப்பவு
மியைவதோ" |
(கலித். 16) |
என்பதால், முகில் தெய்வமாக வணங்கப்பட்டமை
அறியப்படும்.
மால் - 1. கருமை. "மால் கடல்"
(பெரும்பாண். 487). 2. கரு முகில். "சிலைமா லுருமு" (தஞ்சைவா. 164). 3. கரியவனான திருமால்.
"நீர்செல நிமிர்ந்த மாஅல் போல" (முல்லைப். 3).
மால் என்னும் தெய்வப் பெயர்,
உலகவழக்கில் என்றும் திருமால் என்று அடைபெற்றே வழங்கும். மாலை மாயோன் என்னுஞ்
சொல்லாலுங் குறிப்பது இலக்கிய வழக்கு. மாயன் மாயவன் என்பன மாயோன் என்பதன் மறுவடிவங்கள்.
மால் மாயன் என்னும் இரண்டும் ஒரே மூலத்தினின்று தோன்றிய ஒரு பொருட் சொற்கள். மால் - மா
- மாயோன் - கரியவன்.
மருதத் தெய்வம்
குமரிநாட்டு மருதநில மக்கள், முதன்
முதலாக மறுமையைப் பற்றிக் கருதி, இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழ்பவன்
மறுமையில் மேலுலகத்தில் தேவனாய்ப் பிறப்பானென் றும், தீவினை செய்பவன் எரிநரகில் வீழ்வானென்றும்,
விண்ணுலகக் கொள்கையும் எரிநரகக் கொள்கையுங் கொண்டனர்.
நல்வினைகளுட் சிறந்த விருந்தோம்பற்கு ஏராளமாக உணவுப் பொருள் வேண்டுமாதலால், அதை விளைக்கக்
கூடிய உழவர்க்கே அவ்வினை சிறப்பாக வுரியதென்றுங் கருதப்பட்டது. உழவனே விருந்தோம்பி வேளாண்மை
செய்து வந்ததனால், அவன் வேளாளன்
|