பக்கம் எண் :

30தமிழர் மதம்

New Page 1

பாராட்டுத் தெய்வம்

    மதுரை வீரன், மாடன், கறுப்பண்ணன் முதலியவை நடுகல் தெய்வங்கள்.

    கண்ணகி, ஒச்சாண்டம்மை முதலியன பத்தினித் தெய்வங்கள்.

கருதுகோள் தெய்வம்

    திரு என்னும் செல்வத்திற்குத் திருமகளும், கல்விக்கு நாம களும், சாவிற்குக் கூற்றுவனும் தெய்வங்கள்.

    ஞாலம் நாடு மலை ஆறு முதலிய இடங்களைத் தெய்வங் களாக அல்லது தாயராக உருவகித்துக் கொள்வது, கருதுகோள் தெய்வ வணக்கத்தின்பாற் படுவதே.

இல்லுறை தெய்வம்

    குடும்பத் தெய்வமாகவோ தனிப்பட்டவர் தெய்வமாகவோ   கருதிக்கொண்டு, இல்லத்தில் உருவம் வைத்து வழிபாடு செய்யும் தெய்வம் இல்லுறை தெய்வமாம்.

      "அணங்குடை நல்லில்" (மதுரைக். 578)

தொழிற்குலத் தெய்வம்

    பண்டை நிலவாணிகர், கோவேறு கழுதைச் சாத்தாகவும் குதிரைச் சாத்தாகவும் நெடுந்தொலைவு சென்று வாணிகம் செய்து வந்ததால், தம் தெய்வத்திற்குச் சாத்தன் என்று பெயரிட்டதாகத் தெரிகின்றது. அவனுக்கு ஐயனார் என்றும் பெயர்.

    நெடுஞ்சாலை வழியெல்லாம், ஆங்காங்கு ஊருக்குப் புறம் பாகச் சாத்தன் கோவில் அமைந்திருப்பதால், அவன் புறம்பணை யான் (சிலப். 9 : 12)எனப்பட்டான். அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரைகள், குதிரைச் சாத்தை நினைவுறுத்தும்.

    தலைநகர்களிலுள்ள பெருவணிகச் சாத்தினர், விழாநாள்களில் யானை யூர்ந்து செல்வதும் வழக்கமாதலால், சாத்தனுக்கு யானை யுங் குதிரையும் ஊர்தியாகச் சொல்லப்பட்டன.

     "யானை யெருத்தத் தணியிழையார் மேலிரீஇ  
      மாநகர்க் கீந்தார் மணம்." (சிலப். 1:44)

    ஒரு சோழன் சாத்தனிடம் செண்டு பெற்றுச் சென்று, பொன் மலையிலுள்ள பெரும்புதையலை எடுத்ததாகக் கூறுங் கதை, வணிகச் சாத்தினரின் பெருஞ் செல்வத்தைக் குறிக்கும்.