பக்கம் எண் :

40தமிழர் மதம்

New Page 1

சிவமத விரிவளர்ச்சி

    சிவமதம், நாளடைவிற் பல்வேறு வணக்கங்களையும், இறுதி யில் திருமாலியத்தையும் தன்னுட் கொண்டது.

    நாக வணக்கத்தார் நாக வுருவைத் தம் தலையுச்சியில் அணிந்திருந்தனர். அவரைச் சிவனியராக்கற்கு, சிவன் முடிமீதும் நாகவுரு விருப்பதாகப் படிமையமைத்துவிட்டனர். அதோடு, சிவன் பாம்புகளையே பல்வேறு அணிகளாக அணிந்திருப்பதாகவும் காட்டி விட்டனர். அதனால், நாகப்பன், பாம்பணியன் முதலிய பெயர்களும் தோன்றின.

      "பாம்பலங் காரப் பரன்" (திருக்கோ. 11)

    தமிழகம் முழுதும் வேந்தராலும் தொழப்பட்ட காளி, சிவன் தேவியாக்கப்பட்டாள். அது திருவாலங்காட்டுத் திருநடப் போரில் அவள் தோல்வியுற்றதன் விளைவாகக் காட்டப்பட்டது. ஆண்பாற் கேற்ற ஊர்த்த நடனம் பெண்பாற் கேற்காமையால், காளியடியாரும் அதை ஒத்துக்கொள்ள வேண்டிய தாயிற்று.

    உவர் - இவர். உவர் - ஊர். ஊர்தல் = ஏறி நடத்துதல் அல்லது செல்லுதல், உயர்தல். ஊர் - ஊர்த்தம் - வ. ஊர்த்வம் (urdhva).

    சிவையுங் காளியும் ஒன்றானதினால், சிவை நீலி(கருப்பி) யெனவும், காளி இறைவி(இறைவன் தேவி) யெனவும், பெயர் பெற்றனர். அம்மை ஐயை என்பன இருவருக்கும் பொதுப் பெயர் கள். அம்மை - அம்மா - வ. அம்பா.

    காளி சிவன் தேவியான பின், காளியப்பன், பேய்ச்சியப்பன் முதலிய பெயர்கள் சிவனுக்குத் தோன்றின.

    விண்ணக வாழ்வு நிலையற்றதாய் எழுபிறவியுள் அடங்கின தினாலும், விண்ணக வேந்தனுக்கு மழை பெய்விக்கும் அதிகாரமே யிருந்ததனாலும், நிலையான வீட்டுலகத் தலைவனும் எல்லாம் வல்லவனுமான சிவனை வழிபடும் வழிபாட்டுள், வேந்தன் வணக்கம் மறைந்தொழிந்தது.

    இறுதியில், திருமாலும் பெண்ணாக மாறிச் சிவபெருமானின் இடப்பாகத் தமர்ந்தான் என்னும் கதையெழுந்தது. அரி என்னும் திருமால் பெயர் இதனால் தோன்றியிருக்கலாம். அரம் = சிவப்பு. அரன் = சிவன். அரன் - அரி(பெண்பால்). பச்சையன் என்னும் பொருள் பிற்காலத்தது.

    திருமால் மதமும் ஒரு தனி மதமாகத் தொன்றுதொட்டு இருந்து வந்திருப்பினும், சிவனுக்கே இறைவன் என்னும் பெயருண் மையும், "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்"