பக்கம் எண் :

62தமிழர் மதம்

வகுப்பாருள்ளத்திற் பதித்தற்கே, பிராமணரின் முதல்வனாகக் கருதப்படும் பிரமனைப் படைத்துத் தெய்வமாக்கினர். ஆக்கல் தொழிற்கு நீரும் அழிப்புத் தொழிற்குத் தீயும் சிறந்தன வாதலால், நீர்க் கூறனான திருமாலைக் காப்புத் தேவனாகவும், அழல் வண்ண னான சிவனை அழிப்புத் தேவனாகவும், அமைத்தனர் போலும்! அரன் (சிவன்) என்பதன் திரிபான ஹர என்னும் வட சொற்கு அழிப்பவன் என்னும் பொருளுண்மையும், சிவனை அழிப்புத் தேவனாகக் கொள்ள ஏதுவாயிற்று. அழிப்புத் திருமேனி என்னும் பெயர் அமங்கலமாய்த் தோன்றியதனால், அதனை மறைத்துச் சிவனியரை மகிழ்விக்குமாறு, சங்கரன்(நன்மை செய்பவன்) என்றொரு பெயரைச் சிவனுக்கு இட்டனர். அப் பெயர் 'சிவ' என்னும் வடசொற் பொருளொடும் பொருந்துவதாயிற்று.

5. தமிழாரியத் தெய்வ இணைப்பு

    (மங்கல அல்லது நல்ல என்று பொருள்படும்) 'சிவ' என்னும் அடைபெற்ற ஆரியத் தெய்வங்களுள் ஒன்றா யிருந்ததனாலும், அழிப்புத் தொழிற்கேற்ற வலி மிக்குடைமையாலும், கடுங்காற்றுத் தெய்வமான உருத்திரன் அழிப்புத் திருமேனி என்னும் சிவனோடு ஒன்றுபடுத்தப்பட்டான். திருமாலைக் குறிக்கும் விண்டு என்னுந் தென்சொல்லை யொத்த விஷ்ணு என்னும் வடசொல் கதிரவனைக் குறித்ததேனும், சொல்லொப்புமை யொன்றுபற்றியே திருமாலை ஆரியத் தெய்வமாகக் கொண்டுவிட்டனர்.

    இனி, பிரமனைத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய மக னென்றும்; மாயோள் என்னுங் காளியின் தொடர்பினால் நீலி அல்லது நீலம்மை(நீலாம்பிகை) எனப் பெயர்பெற்ற மலை மகளை, மாயோன் என்னும் திருமாலின் தங்கை யென்றும்; பொருத்தமற்ற ஓர் உறவும் பொருத்திவிட்டனர். இதனால், சிவன் மகனாக்கப்பட்ட முருகன் திருமாலின் மருகனானான்.

     "நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ்  
      நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்  
      தாமரைப் பொகுட்டின்" (பெரும்பாண். 402-4)

    மலைமக ளோடிணைக்கப்பட்ட காளியும் திருமாலின் தங்கையானாள்.

      "மாலவற் கிளங்கிளை" (சிலப். 12 : 68)

 (6) தெய்வப் பெருக்கம்

   
ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், அசுவினியர் இருவர் ஆகத் தேவர் முப்பத்து மூவர் எனக் கணக்கிட்டு, பின்னர் அவரை முப்பத்து முக்கோடியராகப் பெருக்கினர்.